கேசி என்னும் பெயரில் முடியும் நூல்கள் யாவும் சமய வாதத்தைக் கூறும் நூல்களே. குண்டலகேசி, அஞ்சனகேசி, காலகேசி ஆகியனவும் சமயத் தருக்க நூல்களே. நீலகேசியும் ஒரு சமயத் தருக்க நூல். இதனை யாப்பருங்கல விருத்தி உரை 'நீலம்' எனச் சுருக்கிக் கூறுகின்றது. இந்நூலுக்கு 'நீலகேசித் திரட்டு' என்னும் பெயரும் உண்டு. இந்நூல் 894 விருத்தப்பாக்கள் கொண்டது.
இந்நூலாசிரியர் ஒரு சமணர் என்பதை அறிகிறோமே தவிர, அவருடைய பேர், ஊர், முதலிய விபரங்கள் கிடைக்கவில்லை. இந்நூலில் அத்வைதம் முதலிய பிற்காலச் சமயங்களைப் பற்றிக் கூறவில்லை. எனவே இந்நூல் 8 அல்லது 9 ஆம் நூற்றாண்டுக்கு முன்னே தோன்றியிருக்கலாம் என்பர். நீலகேசி பௌத்தர்களுடனே அதிகமாக வாதிடுகிறாள்; இக்காலத்தே பௌத்தம் செழித்திருக்க வேண்டும். எனவே "கி.பி. ஏழாம் நூற்றாண்டில் ஹுவான் சுவாங் பௌத்த மதம் தமிழ் நாட்டில் குன்றிய நிலையைக் காண்பதற்கு முன்னர் நீலகேசி தோன்றியிருக்க வேண்டும்" என்பர். தெ . பொ . மீ. "இந்நீலகேசி ஆறாம் நூற்றாண்டினனாகிய மகேந்திரவர்மன் காலத்திற்கு அணித்தாக முந்திய ஐந்தாம் நூற்றாண்டில் தோன்றியிருத்தல் கூடும் என்று ஒருவாறு ஊகிக்கலாம்" என்று , நீலகேசிக்குப் புதிய உரை எழுதிய பெருமழைப் புலவர் பொ . வே. சோமசுந்தரனார் கூறுகின்றார்.
குண்டலகேசிக் காப்பியத்தை மறுப்பதற்கே இந்நீலகேசி பிறந்தது. நூலுள் 'குண்டலகேசி வாதச் சருக்கம்' ஒன்றும் உள்ளது. குண்டலகேசி நூல் முழுவதும் கிடைக்கவில்லை. நீலகேசி மூலம் குண்டலகேசியின் அருமை பெருமைகளை அறிய முடிகின்றது. இந்நூலுக்கு மற்றொரு பெருமை இதன் பழைய உரை. இவ்வுரையை எழுதியவர் சமய திவாகர வாமன முனிவர். இவரே மேருமந்தர புராணம் எழுதிய வாமனாசாரியர் , இப்பெயரோடு, மல்லி சேனாசாரியர் என்னும் பெயரும் திவாகருக்கு உண்டு. இவருடைய சீடரான புழ்ப சேனாசாரியர் , விஜயநகர அரசர் ஹரி ஹரனின் அமைச்சரான ஹிருகப்பரின் குரு திவாகருடைய உரையை 'சமய திவாகரம்' என வழங்குவர் .
நீலகேசியின் கதைச் சுருக்கத்தைக் காண்போம்:
பாஞ்சால நாட்டில் புண்டவர்த்தனம் என்னும் நகரருகே ஒரு சுடுகாடு உள்ளது. அங்குள்ள காளிக்குப் பலியிடுவதை முனிச்சந்திரர் என்னும் சமணத்துறவி தடுக்கிறார். அதனால் காளி , பழையனூர் நீலகேசி என்னும் பேயரசியை அழைத்து முனிவரை ஓட்டச் சொல்கிறது. திருவாலங்காட்டுப் பழையனூர் நீலியே இந்த நீலகேசி . ஆனால் நீலகேசி முனிச்சந்திரரிடம் தோற்று அவரது மாணவியாகிறாள். முனிவர் அவளுக்குச் சமய உண்மைகள் கூறித் தருக்கத்தில் வல்லவள் ஆக்குகிறார். நீலகேசி பிற சமயத்தாரோடு வாதிட்டு வென்று சமண சமயப் புகழை உயர்த்துகிறாள். குண்டலகேசி என்னும் பௌத்த துறவியையும் வாதில் வென்று சிறப்புறுகிறாள்.
வேறு சைன நூல்களில் காணப்படாதது, நீலகேசியின் வரலாறு. இதை இந்நூலாசிரியர் ஒரு நாள் இரவு தன் கனவில் கண்டாராம். அதை அப்படியே காவியமாக்கினார்.
அண்மைக்காலத்தில் ஆங்கில நாவலாசிரியர்கள் சிலர் தம் கனவில் கண்ட கதைகளை எழுதுவதாகக் கூறியுள்ளனர். இவர்களுக்கு முன்னோடியாக நீலகேசி நூலாசிரியர் திகழ்கிறார்.
பாஞ்சால நாட்டு மருத நிலத்தின் வளத்தைக் காவிய ஆசிரியர் வர்ணிக்கின்றார். நீர் வளமிகுந்த வயல்களிடையே வாளைகள் புரள்வதையும் , ஆணும் பெண்ணுமான நாரைகள் கூடி மகிழ்வதையும், கம்புள் எனப்படும் கம்பங்கோழி விரிந்த சிறகும் கரிய வரிகளும் உடையவனவாய் நடப்பதும் கனைப்பதுமாகிய செயல்களையும், திசை தோறும் செந்நெல் கதிர்களைச் சுமந்து கவினோடு காட்சி தருவதையும் கூறும் கவிதை இனிக்கின்றது .
மருதநிலத்து வளத்தைப் பாடி நம் உள்ளத்தை மகிழ்வித்த அதே கவிஞர் பாலாலயம் என்னும் சுடுகாட்டின் கொடுமையைப் பாடிக் குலை நடுங்கச் செய்கின்றார். சுடுகாட்டில் பாடையில் தொங்கும் மாலைகள், வெண்டலைகள் , கரிந்த கொள்ளிகள் , கொடிபோல நீளக்கிழிந்த ஆடைகள், அகல் விளக்குகள், பிணங்கள் அற்ற பாடைகள் , எலும்புகள், ஆகியவை விரவிக் கிடப்ப, கள்ளிகள் வளர்ந்த இடங்கள் விரவிக் காண்பதற்குக் கடுமை உடையதாகத் தோன்றுகிறது சுடுகாடு.
0 கருத்துகள்