உதயண குமார காவியத்தின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை. இக்காப்பியம் கொங்கு வேளிரின் 'பெருங்கதை ' கூறும் உதயணன் வரலாற்றையே கூறுகின்றது. பெருங்கதையின் உதயணன் வரலாறு, வடமொழியிலுள்ள 'பிருகத்கதாமஞ்சரி', 'கதாசரித சாகரம்'ஆகிய நூல்களிலும், பைசாச மொழியில் அமைந்த 'பிருகத்கதா' என்னும் நூலிலும் உள்ளது.
பெருங்கதைப் பெரியதாகவும் அகவற்பாவிலும் அமைந்தது. அதற்கு ஒரு சுருக்கப் பதிப்பு வெளியிடுவது போல் இந்நூலாசிரியர் உதயணன் கதையைச் சுருங்கிய அளவில் விருத்தப்பாவில் இயற்றினார்.இதன் கண் உஞ்சைக் காண்டம், இலாவண காண்டம், மகதகாண்டம், வத்தவ காண்டம், நரவாகன காண்டம், துறவுக் காண்டம் ஆகிய ஆறு காண்டங்கள் உள்ளன.காப்பியத்துள் மொத்தம் 367 செய்யுள்கள் உள்ளன.
வத்தவ நாட்டின் கௌசாம்பி நகரத்து அரசன் உதயணன். அவனை அவந்தி நாட்டு மன்னன் பிரச்சோதனன் என்னும் அரசன் மாய யானையின் மூலம் சிறைப்படுத்துகின்றன. உதயணன் நண்பனும் அமைச்சனுமான யூகி என்பான், அவன் சிறை மீளத் துணை செய்கிறான். பிரச்சோதனன் மகள் வாசவ தத்தைக்கு யாழ் சொல்லிக் கொடுக்கும் உதயணன் அவளை மணந்து தன் நாடு சென்று அவளிடம் மீளாத பேரன்பு உடையவனாகின்றான். இறுதியில் உதயணன் துறவு மேற்கொள்கின்றான்.
'பெருங்கதை' காப்பியம் இன்று கிடைத்தாலும், அதன் முதலிலும் இடையிலும் இறுதியிலும் சில பகுதிகள் கிடைக்கவில்லை. அப்பகுதிகளின் கதைப் போக்கை உணர உதயண குமார காவியம் உதவுகின்றது. இதுவே இக்காவியத்தின் பயன்.மற்றபடி இதன் செய்யுள்கள் அவ்வளவு சுவையுடையன அல்ல. இக்காவியத்துக்கு உரையெழுதிய பெருமழைப் புலவர் பெ.வே. சோமசுந்தரனார் , "இவர் (உதயண குமார காவிய ஆசிரியர்) செய்யுள் செய்யும் வன்மையுடையவர் அல்லர் என்பது இவர் செய்யுளை ஓதுவார்க்கு விளங்கும்" என்று கூறுகின்றார். எனினும் இக்காவியப் பாடல் ஒன்றையேனும் நாம் அறிந்து கொள்வோம்.
நளகிரி என்னும் யானைக்கு மதம் பிடிக்கிறது. அதனை யாழிசைத்து உதயணன் அடக்கினான். மதம் பிடித்த யானையின் செயலைக் காவிய ஆசிரியர் ஓவியமாகத் தீட்டிக் காட்டுகின்றார்.
0 கருத்துகள்