சோழ நாட்டில் சீகாழியில் தோன்றியவர், நாளும் இன்னிசையால் தமிழ் வளர்த்த ஞானசம்பந்தர். அந்தணர் குலத்தில் சிவபாத இருதயருக்கும் பகவதி அம்மையாருக்கும் பிறந்தவர். இவர் ஆளுடைய பிள்ளையார் என்னும் சிறப்புப் பெயர் பெற்றவர். மூன்றாண்டுப் பிள்ளையாக இருந்த போதே, உமாதேவியாரின் ஞானப் பாலைப் பருகித் தோடுடைய செவியன்' எனத் தொடங்கும் பாடலைப் பாடியவர். அது முதல் சிவபெருமான் உறையும் திருத்தலங்கள் பலவற்றுக்கும் சென்று பதிகங்களைப் பண்ணமையைப் பாடிச் சைவ நெறியையும் செந்தமிழ் இலக்கியத்தையும் வளர்த்து வந்தார்.
சம்பந்தர் காலத்தில், பாண்டிய நாட்டை ஆண்ட நெடுமாறன் சமண சமயத்தவனாய் இருந்தான். பாண்டிமாதேவி மங்கையற்கரசியின் வேண்டுகோளின் படி சம்பந்தர் பாண்டிநாடு சென்று நெடுமாறனின் வெப்பு நோயினை "மந்திரமாவது நீறு" என்னும் பாடல்படி , நீரணிவித்து நீக்கினார். அனல் வாதம், புனல் வாதம் முதலியன புரிந்து சமணரை வென்றார்.
திருநாவுக்கரசர், திருநீலகண்ட யாழ்ப்பாணர், முருக நாயனார், சிறுத்தொண்டர் முதலிய தம் காலத்து அடியார்களைக் கண்டு, பழகி மகிழ்ந்தார், சம்பந்தர். இவர் பெரியோர்களின் விருப்பப்படி, திருநல்லூர் நம்பாண்டார் என்பவரின் புதல்வி சொக்கியாரை மணந்து கொள்ளச் சம்மதித்தார். திருமணத்திற்கு முன் ஒரு பதிகம் பாடி, மணம் காணவந்தார். அனைவருக்கும் முக்தியளித்துத் தாமும் மணப் பெண்ணோடு இறைவனடியடைந்தார்.
ஞானசம்பந்தர் ஏழாம் நூற்றாண்டின் முன்பகுதியினர் இவர் பதினாறு ஆண்டுகள் இம்மண்ணுலகில் வாழ்ந்தார். ஆதிசங்கரர் தமது 'சௌந்தரிய லகிரி' யில் சம்பந்தரைத் 'திராவிட சிசு' என்று குறிப்பிடுகிறார்.
சேக்கிழார் தமது திருத்தொண்டர் புராணமான பெரிய புராணத்தில் ஞானசம்பந்தரின் வரலாற்றை விரிவாக, ஏறத்தாழ நூலின் சரிபாதி அளவாகப் பாடியுள்ளார். அதனால் 'பிள்ளை பாதி, புராணம் பாதி' என்னும் பழமொழி, எழுந்தது.
சம்பந்தர் பாடிய பதிகங்கள் மொத்தம் பதினாறாயிரம் என்று நம்பியாண்டார் நம்பி குறிப்பிட்டுள்ளார். எனினும் திருமுறை கண்ட காலத்தில் கிடைத்தவை 381 பதிகங்களே. இப்பதிகங்கள் சைவத் திமுறை பன்னிரண்டுகள், முதல் மூன்று திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பதிகத்திலும் பதினோரு பாடல்கள் உள்ளன. இப்போது நமக்குக் கிடைப்பவை மொத்தம் 4181 பாடல்கள்.
திருவையாற்றுள் இறைவன் பெருமை கூறும் பாடலிலே அத்திருப்பதியின் இயற்கை அழகையும் இணைத்துக் கூறுகிறார் சம்பந்தர்.
'புலனைந்தும் பொறிகலங்கி, நெறிமயங்கிஅறிவழிந்திட்டு, ஐம்மே லுந்தி,அலமந்த போதாக அஞ்சேல் என்றுஅருள் செய்வான் அமரும் கோயில்,வலம் வந்த மடவார்கள் நடமாட,முழவதிர மழையென் றஞ்சி,சிலமந்தி அலமந்து மரமேறிமுகில் பார்க்கும் திருவை யாறே '
'தோணிபுரமாகிய சீர்காழி உறையும் சிவபெருமானின் திருநாமம் ஒரு முறை உரை' என்று தலைவி கிள்ளையிடம் கேட்பதாக ஆளுடைய பிள்ளை பாடிய பாடல் தேனொடு பால் கலந்த சுவை தருவது:
'சிறையரும் மடக்கிளியே !இங்கே வா; தேனோடு பால்முறையாலே உணத்தருவேன்;மொய்பவளத் தொடுதரளம்துறையாரும் கடல் தோணிபுரத்தீசன், துளங்கும் இளம்பிறையாளன் திருநாமம்எனக்கொரு கால் பேசாயே'
திருஞானசம்பந்தரின் ஒரு பாடலை ஒருகால் கற்றாலும் துன்பம் அருகும் ; இன்பம் பெருகும்.

0 கருத்துகள்