12. களவழி நாற்பது
போர்க்களத்து நிகழ்ச்சிகளைப் பாடும் நாற்பது பாக்களைக் கொண்டது, களவழி நாற்பது. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் புறப்பொருள் சார்ந்த போரைப் பற்றிக் கூறும் நூல் இஃது ஒன்றே.
'ஏரோர் களவழி அன்றிக் களவழித்தேரோர் தோற்றிய வென்றியும்'
என்னும் தொல்காப்பிய நூற்பா, ஏர்க்களம் பற்றியும் போர்க்களம் பற்றியும் பாடப்பெறுவது களவழி என்று தெரிவிக்கிறது. களவழி, வாகைத் திணையில் ஒரு துறை, மேற்குறிப்பிட்ட தொல்காப்பிய நூற்பாவுக்கு உரை எழுதியவர்கள் களவழி, நாற்பது நூலையும் பாடலையும் மேற்கோளாகக் காட்டியுள்ளனர். பரணி நூலில் 'களம் பாடியது' என்னும் பகுதி களவழி போலவே போர்க்களத்து நிகழ்ச்சிகளை விளக்கும். களவழி நாற்பதில் உள்ள பாடல்களில் ஒவ்வொன்றும் 'களத்து 'என்னும் சொல்லைக் கொண்டு முடிகிறது. இந்நூல் அம்மை என்னும் வனப்பு அமைந்தது.
இந்நூலை இயற்றியவர் பொய்கையார். சோழன் கோச்செங்கணானும், சேரமான் கணைக்கால் இரும்பொறையும் போர்'என்னும் ஊரில் பொருதனர். அப்போது சோழன் சேரனை வென்று சிறையிட்டான். புலவர் பொய்கையார் இக் களவழியைப் பாடிச் சேரனைச் சிறை மீட்ட்டார். இச்செய்தியை நூலின் இறுதியில் காணப்பெறும் ஒரு குறிப்புக் கூறுகிறது. இச் செய்தியினைக் கலிங்கத்துப் பரணி, மூவருலா, தமிழ்விடு தூது முதலிய நூல்களும் கூறுகின்றன.
'நல்லவன் பொய்கை களவம் நாற்பதுக்குவில்லவன் கால்தளையை விட்ட கோன் '
என்பது 'மூவருலா'ப் பாடல்.
புறநானூற்றில் 'குழவி இறப்பினும் ' எனத் தொடங்கும் பாடலின் குறிப்பு, "சேரமான் கணைக்கால் இரும்பொறை சோழன் செங்கணானோடு திருப்போர்ப் புயத்துப் பொருது , பற்றுக் கோட்பட்டு , குடவாயிற் கோட்டத்துச் சிறையில் கிடந்து 'தண்ணீர் தா' என்று பெறாது, பெயர்த்துப் பெற்றுக் கைக்கொண்டிருந்து உண்ணான் சொல்லித் துஞ்சிய பாட்டு" என்று கூறுகிறது.
புறமும் களவழியும் ஒரே நிகழ்ச்சியைக் கூறுகின்றன என வாதிட்டு, களவழி நாற்பது சங்க கால நூல் என்றும், இதைப் பாடியவர் சங்கப் புலவர் பொய்கையாரே என்றும் கூறுவர் , சிலர். களவழி நாற்பது நூல் செங்கணான் பெயரையோ, இரும்பொறை பெயரையோ வெளிப்படையாகச் சொல்லவில்லை என்பதால் அந்நூல் பிற்காலச் சோழர் காலத்தது என்றும், இதனைப் பாடிய பொய்கையார் சங்கத்துப் பொய்கையார் அல்லர் என்றும் கூறுவர் , சிலர். முதல் ஆழ்வார்களில் ஒருவரான பொய்கையாரும் இந்நூலாசிரியரும் ஒருவர் அல்லர்.
இந்நூலின் பெயர் 'நாற்பது' என இருப்பினும் நூலில் 41 வெண்பாக்கள் உள்ளன. போர்க்களத்து நிகழ்ச்சிகளில், யானைப் போரையே இது மிகுதியாகக் கூறுகிறது. யானையின் துதிக்கையை வெட்ட, குருதி கொட்டுகிறது. அது ஒரு பையிலிருந்து பவளத்தைக் கொட்டுவது போல அமைந்துள்ளது எனப் பொய்கையார் உவமிக்கும் பாடல் இலக்கிய நயம் பெற்றது.
'கவளம் கொள் யானையின் கைகள் துணிக்க ,
பவளம் சொரிதரு பைபோல், திவள்ஒளிய
ஒண்செங் குருதி உமிழும், புனல்நாடன்
கொங்கரை அட்ட களத்து .'
இப்பாடல் மூலம் சேரனுக்குத் துணையாகக் கொங்கரும் போரிட்டனர் என்பது தெரிகிறது.

0 கருத்துகள்