பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் திருக்குறளுக்கு அடுத்த சிறப்பைப் பெற்ற நூல், நாலடியார். திருக்குறள் இரண்டடிக் குறள் வெண்பாவால் இயன்ற நூல். நாலடியார், நான்கடி வெண்பாக்களால் இயற்றப்பட்ட நூல், குறளின் கருத்தையே ஓர் எடுத்துக்காட்டுடன் விளக்கிக் கூறும் அமைப்பைக் கொண்டவையே நாலடியார் பாடல்கள். எனவே இதைத் 'திருக்குறளின் விளக்கம்' என்று கொள்வர்.
'நாலடி' என்பதும் இதன் பெயரே. இப்பெயர் 'ஆர்' என்னும் சிறப்பு விகுதி பெற்று 'நாலடியார்' ஆனது. நூலில் 400 பாக்கள் இருப்பதால் சங்கத் தொகை நூல்போல, 'நாலடி நானூறு' எனவும் வழங்கப் படுகிறது. பாரதியார் என்பது வேறுள பாரதியார்களைக் குறிக்காமல் சுப்பிரமணிய பாரதியாரையே குறிப்பது போல, நாலடியார் என்பது கீழ்க்கணக்கில் உள்ள நாலடிப் பாக்கள் பெற்ற நூல்கள் எவற்றையும் குறிக்காது நாலடி ஒன்றையே குறிப்பது. இந்நூலின் சிறப்பை உணர்த்தும் 'நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி' என்னும் பழமொழியும், 'பழகு தமிழ்ச் சொல்லருமை நால் இரண்டில்' என்னும் தனிப்பாடல் அடியும் நாலடியாரின் புகழைப் பரப்பும். இதற்கு 'வேளாண் வேதம்' என்னும் வேறு பெயரும் உண்டு.
இது ஒரு தொகை நூல். சமண முனிவர் எண்ணாயிரவர் தம் நாட்டில் பஞ்சம் வந்ததால் பாண்டிய நாடு அடைந்து அரசவை ஆதரவில் வாழ்ந்தனர். பஞ்சம் நீங்கிய பின் தம் நாடு செல்ல விழைந்த அவர்களைப் பிரிய மனமற்ற பாண்டியன் விடை தரவில்லை. எனவே ஒருநாள் இரவு முனிவர் ஒவ்வொருவரும் ஒரு பாடல் எழுதித் தம் படுக்கையில் வைத்துவிட்டுப் பாண்டியன் அறியாமல் தம் நாடு சேர்ந்தனர். இதை அறிந்து கோபமுற்ற பாண்டியன் எண்ணாயிரம் பாடல்களையும் வைகையில் ஏறியச் செய்தான். அவற்றுள் 400 பாடல்கள் நீர்ப்போக்கை எதிர்த்து வரவே அவை அழியக் கூடாத அரிய பாடல்கள் என உணர்ந்து, பாண்டியன் அவற்றைத் தொகுத்தான். அதுவே நாலடியார். இது ஒரு கர்ண பரம்பரைக் கதை. இக்கதை நாலடியார் தொகுப்பு நூல் என்பதைத் தெரிவிக்கிறது.
நூலில் கூறியது கூறலாகச் சில பாடல்கள் இருப்பதும், அதிகாரங்களுக்குப் பொருந்தாத பாடல்கள் இடம் பெற்று இருப்பதும், இந்நூல் தொகுப்பு நூல் என்னும் கூற்றுக்குத் துணை செய்யும்.
'எண் பெருங் குன்றத்து எணாஆயிரம் இருடிபண்பொருந்தப் பாடியபா நானூறும்'
'வெள்ளாண் மரபுக்கு வேதம் எனச் சான்றோர்எல்லாரும் கூடி எடுத்துரைத்த சொல்லாரும்நாலடிநானூறும் நன்குஇனிதா என்மனத்தேசீலமுடன் நிற்க தெளிந்து.'
என வரும் தனிப் பாடல்களும் இந்நூல் தொகுப்பு நூல் என்பதை உறுதியாக்கும். நச்சினார்க்கினியரும் 'சமண முனிவர் பலரால் எழுதப் பட்டது நாலடியார்' எனும் கருத்தைச் சிந்தாமணி உறையுள் தந்துள்ளார்,
"பெரு முத்தரையர் பெரிது உவந்துஈயும் கருணைசோறு""பெருமுத்தரையரே செல்வரைச் சென்று இரவாதவர்"
நாலடியாரின் இவ்விரண்டு பாடல்கள் (200,290) முத்தரையர் பற்றிக் கூறுகின்றன. முத்தரையர், கி.பி. ஏழாம் நூற்றாண்டைச் சார்ந்த முதலாம் பரமேசுவர்மன் காலத்தில் சிறப்புற்றவர்கள். எனவே இந்நூலும் ஏழாம் நூற்றாண்டினது என்பர் வையாபுரிப்பிள்ளை. முத்தரையர் பாண்டியரையும் குறிக்கும் எனக் கூறி, நாலடியாரின் காலம் 7 ஆம் நூற்றாண்டுக்கு முந்தியது என்பார் சிலர்.
நாலடியாரில் கடவுள் வாழ்த்து நீங்கலாக 40 அதிகாரங்களும், 12 இயல்களும், 400 பாடல்களும் உள்ளன. இவற்றை அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என முப்பாலாகப் பகுத்து உள்ளனர். ஓர் அதிகாரத்தில் பத்துப் பாடல்கள் உள்ளன. நாலடியாருக்கு அதிகாரம் வகுத்தவர் பதுமனார். அதிகாரங்களை முப்பாலாகப் பகுத்து உரை கண்டவர் தருமர். பதுமனாரும் ஓர் உரை எழுதி உள்ளார். நாலடியாருக்குக் கிடைக்கும் உரைகளுடன், 'நாலடியார் உரை வளம்' என்னும் நூல் வெளிவந்துள்ளது.
எக்கருத்தையும் இதயத்தே பதியத்தக்க முறையில் சாற்றுவது நாலடியார். ஒரு கருமி பெருஞ்செல்வம் சேமித்து வைத்துள்ளான், அவன் செல்வத்தைப் பிறர்க்கு வழங்காமல், தானும் அனுபவிக்காமல் சொந்தம் கொண்டாடுகிறான். ஏழையும் அச்செல்வத்தை அனுபவிப்பதில்லை. பிறர்க்கு வழங்குவதும் இல்லை. 'கருமியின் செல்வம்' 'என் செல்வம்' என்று அவனும் கூறலாமாம். கருமியும் ஏழையே என்பது கருத்து.
'எனது எனது' என்று இருக்கும் ஏழை பொருளை'எனது எனது' என்று இருப்பன் யானும்; தனது ஆயின்தானும் அதனை வழங்கான்; பயன் துவ்வான்யானும் அதனை அது.
கல்வியின் சிறப்பை நாலடியார் விளக்கும் முறை சீரியது .
'குஞ்சி அழகும் கொடுந்தானைக் கோட்டழகும்மஞ்சள் அழகும் அழகல்ல நெஞ்சத்துநல்லம் யாம்' என்னும் நடுவுநிலைமையால்கல்வி அழகே அழகு.
'கல்வி கரைஇல; கற்பவர் நாள்சில;மெல்ல நினைக்கின் பிணிபல; தெள்ளிதின்ஆராய்ந்து அமைவுடைய கற்பவே, நீர்ஒழியப்பால் உண் குருகின் தெரிந்து!
இவ்வாறு ஆராய்ந்து கற்பதற்கு ஏற்றவை, பாலடிசிலாய் இனிக்கும் நாலடியார் பாடல்கள்.
1 கருத்துகள்
கொண்டான்
பதிலளிநீக்கு