சங்க காலம் என்பது கி.பி. இரண்டாம் நூற்றாண்டு வரையுள்ள காலம். சிலர் கி.பி. மூன்றாம் நூற்றாண்டு வரையுள்ள காலம் என்பர். கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதி முதல் ஆறாம் நூற்றாண்டு வரையுள்ள காலம் இருண்ட காலம் ஆகும். இது தமிழ்நாட்டு வரலாற்றிலும் இருண்ட காலம். தமிழிலக்கிய வரலாற்றிலும் இருண்ட காலம். இதே காலப்பகுதியைச் 'சங்கம் மருவிய காலம்' என்றும் குறிப்பிடுவார்கள்.
இருண்ட காலத்து இலக்கியங்கள்
தமிழ்நாடு முழுவதையும் அடிமைப்படுத்திய களப்பிரர் காலமாகிய இருண்ட காலத்தில் சங்க இலக்கியம் போன்ற - சிலம்பு, மேகலை போன்ற முழுநிலா உதயமாகவில்லை. எனினும் செறிந்த இருளின் நடுவே கண்சிமிட்டும் விண்மீன்கள் போலச் சில நீதி நூல்கள் தோன்றின. இவை பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் ஆகும். அவற்றுள் நீதி நூல் அல்லாத வேறு நூல் சிலவும் உண்டு.
புறச் சமயங்களின் ஆதிக்கத்துக்கு நடுவே அகச் சமயத்துக்கு ஆக்கம் தேடும் ஊக்கமும் உணர்வும் பெற்ற சிவனடியார் சிலர் செந்தமிழ்ப் பக்திப் பனுவல்கள் செய்தனர். திருமூலரின் திருமந்திரமும், காரைக்கால் அம்மையார் அருளிய அற்புதத்திருவந்தாதி, திருவிரட்டை மணிமாலை, திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள் இரண்டு ஆகிய நான்கு நூல்களும் புறச் சமய இருட்டை விரட்டும் அகச் சமய அகல்விளக்குகளாகச் சுடர் விட்டன. பௌத்தரும் சமணரும் புறச் சமயத்தாராயினும் இன்றமிழ் பயின்று பல அரிய தமிழ் நூல்களை இக்காலத்தே இயற்றினர் . வச்சிரநந்தி என்னும் சமண முனிவர் மதுரையில் தமிழ்ச்சங்கம் ஒன்றும் நிறுவித் தமிழ் வளர்த்தார். அச்சங்கத்தில் பல நூல்கள் அரங்கேறின.
இருண்ட காலத்து நூல்களில் இலக்கியச் சுவை மிகுந்தது முத்தொள்ளாயிரம். இது மூவேந்தரின் சிறப்புரைக்கும் நூல்.
இருண்ட காலத்திலும் சில இலக்கியங்கள் இயற்றி இலக்கிய வரலாற்றில் பெரும் இடைவெளி தோன்றாமல் காத்த புலவர்களைப் போற்றுதல் நம் கடன்.
இனி, மேல்கணக்கு, கீழ்க்கணக்கு என்னும் தொகைகள் தோன்றியதை ஆராய்ந்து, அதன் பின்னர் இருண்ட காலத்தே எழுந்த நூல்களை ஆய்வோம்.

கருத்துகள்
கருத்துரையிடுக