Looking For Anything Specific?

மணிமேகலை

    



      தமிழில் எழுந்த இரண்டாவது காப்பியம் மணிமேகலை.  தமிழ் நாட்டில் நடந்த கதையைக் கூறும் இரண்டாவது காப்பியம் மணிமேகலை.  தமிழின் முதல் காப்பியம் - தமிழ் நாட்டில் நடந்த கதையைக் கூறும் முதல் காப்பியம் சிலப்பதிகாரம் ஆகும்.  சிலப்பதிகாரத்தின் தொடர்ச்சியாக மணிமேகலை அமைந்துள்ளது.  சிலப்பதிகாரத்தின் இறுதியில் 'மணிமேகலை மேல் உரைப் பொருள் முற்றிய சிலப்பதிகாரம்"  முற்றும், எனக் கூறப்படுகிறது.  எனவே சிலம்பும் மேகலையும் இரட்டைக் காப்பியங்கள்.  இரண்டும் சேர்ந்தே அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கையும் தருவதால், இந்த இரட்டை நூல்களை ஒற்றைப் பெருங்காப்பியமாகக் கருதுதல் உண்டு.

    மணிமேகலை காப்பியம் இரு சிறப்புகளில் இரண்டாவதாக நிற்பது போலச் சில சிறப்புகளில் முதலாவதாகவும் நிற்கிறது.  தமிழில் தோன்றிய முதல் சமயக் காப்பியம் மணிமேகலை.  காப்பியத் தலைவியின் பெயரையே தலைப்பாகக் கொண்ட முதல் காப்பியம் மணிமேகலை.  பரத்தையின் மகளைக் காப்பியத் தலைவியாகக் கொண்டு புரட்சி செய்யும் முதல் காப்பியம் மணிமேகலை.

    'மணிமேகலை' என்பது காப்பியத்தின் பெயர்.  இதற்கு 'மணிமேகலை துறவு' என்னும் பெயர் உண்டு.

    காப்பிய ஆசிரியர் மதுரைக்  கூலவாணிகன் சாத்தனார்- முடி மன்னர்களும் போற்றும் பெரும் புகழ் பெற்ற சாத்தனார் - இளங்கோ அடிகளின் தோழர்.  இளங்கோ இவரைத் 'தண்டமிழ் ஆசான்' என்று பாராட்டுகிறார்.  கண்ணகியின் வரலாற்றைச் செங்குட்டுவனுக்கும் , இளங்கோவுக்கும் உரைத்தவர், சாத்தனாரே.  அக்கதையை இளங்கோ காவியமாக்க விரும்பியபோது, "அடிகள் நீரே அருளுக" என்று அனுமதித்தவர் சாத்தனார்.  இளங்கோ சிலம்பை அரங்கேற்றிய போது , முன்னின்று கேட்டவர் சாத்தனார்.  அதன் பின்னர் சிலம்பின் தொடர்ச்சியாக மணிமேகலையைப் பாடி இளங்கோவின் முன் அரங்கேற்றினார்.

    இளங்கோவும், சாத்தனாரும் சம காலத்தவர்;  சங்க காலத்தவர்; சங்க இலக்கியத்தில் இடம் பெறும் சாத்தனார், மணிமேகலையை இயற்றியவரே என்பார் சிலர்.  மறுப்பார் சிலர்.  மணிமேகலை கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் எழுந்த நூலே என்று ஆராய்ச்சி அறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி 'பௌத்தமும் தமிழும்' என்னும் நூலில் நிறுவியுள்ளார்.  புகாரின் ஒரு பகுதியைக் கடல் கொண்டதை மணிமேகலை பாடுவதால் இது சிலப்பதிகாரத்திற்குப் பின்னே தோன்றிய நூல் என்பது சிலர் கூற்று.

    மணிமேகலைக் காப்பியக் கதை ஒரு புரட்சிக் கதை.  வணிகரில் சிறந்த கோவலனுக்கும் கணிகையரில் சிறந்த மாதவிக்கும் பிறந்த மகள் , மணிமேகலை.  கோவலன் மறைந்ததும் மாதவி உலக வாழ்வை வெறுத்து அறவண அடிகளை அணுகித் துறவறம் பூண்டாள்.  மகள் மணிமேகலையைப் பரத்தை வாழ்வில் ஈடுபடுத்த பாட்டி சித்திராபதி முயன்றாள் .  மாதவி அதனை வெறுத்து, "மாபெரும் பத்தினி மகள் மணிமேகலை.  அவள் தவநெறி மேற்கொள்வாளே தவிர அவநெறி மேற்கொள்ள மாட்டாள்" எனக் கூறி, மகளின் கூந்தலைக் களைந்து அவளையும் தூய துறவு வாழ்வு மேற்கொள்ளச் செய்கிறாள்.  ஒரு பரத்தை, அதுவும் கருவம் இருக்கும் மங்கைப் பருவத்துப் பேரழகி துறவியாவது, சான்றோரையும் கண்கலங்கச் செய்யும் நிகழ்ச்சி.  இடையே நாட்டின் இளவரசன் உதயகுமாரன் அவளைக் காதலிக்கிறான்.  மணிமேகலை மணிபல்லவம் அடைந்து பழம் பிறப்பு உணர்ந்து அமுதசுரபி பெற்று மீள்கிறாள். நாடெங்கும் திரிந்து பசியும் பிணியும் போக்குகிறாள்.உதயகுமாரன் கொலையுண்ணச் சிறை புகுந்து மணிமேகலை சிறைச்சாலையை அறச்சாலையாக்கி மகனை இழந்த மாதரசிக்கு அறமுரைக்கிறாள்.  ஊர் பல சென்று அறங்கள் உரைத்துப் பௌத்த நெறியின் படி முக்தியடைகிறாள்.  மணிமேகலையின் கதையோடு, இந்நூலில் வரும் ஆதிரை வரலாறு , ஆபுத்திரன் வரலாறு ஆகியனவும் காப்பியத்துக்குச் சுவை சேர்க்கின்றன.

    இக்கதையைச் சாத்தனார் முப்பது காதைகளாகப் பாடியுள்ளார்.  சமயக் காப்பியமாதலால், வட மொழியில் வழங்கிய சமயக் கருத்துகளைத் தமிழில் பொருத்தமுற உரைக்கும் பணியில் சாத்தனார் வெற்றி கண்டுள்ளார்.  டாக்டர் உ.வே. சாமிநாதையர், "சமய சம்பந்தமான பல சொற்களையும் தொடர்களையும் வேறு சிலவற்றையும் இடத்திற்கேற்ப இவர் (சாத்தனார்) மொழி பெயர்த்து அமைத்திருத்தல் மிகப் பாராட்டிற்கு உரியதொன்றாம்" என்று புகழ்கிறார்.  இந்நூலில் உள்ள சமயக் கணக்கர் தம் திறம் கேட்ட காதை , தவத்திறம் பூண்டு தருமம் கேட்ட காதை , பவத் திறம் அறுக எனப் பாவை நோற்ற காதை ஆகிய மூன்று கதைகளும் பௌத்த சமயக் கொள்கையினையும் புறச்சமய உண்மைகளையும் உரைப்பவையாகும்.  இதனுள் நாளந்தாப் பல்கலைக் கழகத் தலைவர்களான   திந்நாகரும் தரும பாலரும் கண்ட தருக்க நெறியின் மொழி பெயர்ப்பாக வரும் பகுதிகள் உண்டு, "இவை இடைச் செருகல்கள் போலும்" என்கிறார் தெ . பொ . மீனாட்சி சுந்தரனார்.

     தண்டமிழ் ஆசான் சாத்தனாரின் இலக்கியத்தை இளங்கோவடிகளின் நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கும் தமிழறிஞர்கள், மேகலை யின் சிறப்புச் சற்றே குறைவு எனக் கூறுவர்.  "சிலப்பதிகார அமைப்பில் காணும் நல்ல இலக்கியக் கூறுகள் மணிமேகலை நூலுக்கு இல்லை என்பது வெளிப்படை" என்கிறார் டாக்டர் வ.சுப. மாணிக்கம்.  "இலக்கியச் சுவையைவிடப் பௌத்த சமய விளக்கமே காப்பியத்தில் மேலோங்கி உள்ளது.  பலவகை உணர்ச்சிகளை வெவ்வேறு செய்யுள் ஓசைகளால் புலப்படுத்தும் சிறப்புச் சிலப்பதிகாரத்தில் உள்ளது.  மணிமேகலையில் அதுவும் இல்லை.  நூல் முழுதும் ஒரே வகையான ஓசையுள்ள அகவல் என்னும் செய்யுலால் அமைந்துள்ளது" என்று வழுக் காண்பர் வரதராசனார்.

     மணிமேகலையின் இலக்கியச் சிறப்பைப் பாராட்டுவோர் எண்ணிக்கையே பெரிது.  சைவப் பெரியவரான துறைமங்கலம் சிவப்பிரகாசர், "கொந்தார் சூழல் மணிமேகலை நூல் நுட்பம் கொள்வது எங்கன்!' என் வியக்கிறார். "மாதவி பெற்ற மணிமேகலை நம்மை வாழ்விப்பதே" என்று அம்பிகாபதிக் கோவை ஆராதனை செய்கிறது.  கவியோகி சுத்தானந்த பாரதியார் தமிழ்த்தாயை "காதொளிரும் குண்டலமும் கைக்கு வளையாபதியும் கருணை மார்பின் மீதொளிர் சிந்தாமணியும் மெல்லிடையில் மேகலையும் சிலம்பார் இன்பப்போது ஒளிரும் திருவடியும்" என்று வருணிக்கும் போது நடுநாயகமாக அவள் இடையே அணி செய்வது மணிமேகலையே எனப் புகழ்கிறார்.

    சாத்தனாரின் தண்டமிழ்த் தேனில் சில துளிகளைச் சுவைப்போம்:

    நிலையாமையை அறிந்து நல்லறம் செய்க எனச் செப்புகிறார் சாத்தனார்:

'பிறத்தலும் மூத்தலும் பிணிபட்டு இரங்களும் 
இறத்தலும் உடையது இடும்பைக் கொள்கலம் 
மக்கள் யாக்கை இதுவென உணர்ந்து 
மிக்க நல்லறம் விரும்புதல் புரிந்தேன்'

சாத்தனார் உரைக்கும் அறத்தின் திறம் காண்க.

'அறம் எனப்படுவது யாதெனக் கேட்பின் 
மறவாது இதுகேள்; மன்னுயிர்க்கு எல்லாம் 
உண்டியும் உடையும் உறையுளும் அல்லது கண்டத்தில்'

    பசி வந்திடப் பத்தும் பறந்து போகும் தன்மையைக் கூறிப் பசியைப் பிணி எனத்  தூற்றி, 'பாவி' என இகழ்கிறார் புலவர்:

'குடிப்பிறப்பு அழிக்கும்; விழுப்பம் கொல்லும் ;
பிடித்த கல்விப் பெரும்புணை வீடூஉம்;
நாண் அணி களையும், மாண்எழில் சிதைக்கும் 
பூண் அணி மாதரோடு புறங்கடை நிறுத்தும் 
பசிப்பிணி என்னும் பாவி'

எனவே பசியென்று வந்தால் ஒருபிடி சோறு புசி யென்று தருபவன் உயிரையே கொடுத்த இறைவனாகிறான்.

'மண்டிணி ஞாலத்து வாழ்வோர்க்கு எல்லாம் 
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே '.

    மகனை இழந்த துயரால் மணிமேகலைக்குத் தீமை செய்த அரசமாதேவிக்கு அறிவு புகட்டும் அறச் செல்வி, "எல்லோரையும் நேசி" என உபதேசிக்கிறார்:

'பூங்கொடி நல்லாய் பொருந்தாது செய்தனை 
உடற்கு அழுத்தனையோ? உயிர்க்கு அழுத்தனையோ?
உடற்கு அழுத்தனையேல் உன்மகன் தன்னை 
எடுத்துப் புறங்காடு இட்டனர் யாரே?
உயிர்க்கு அழுத்தனையேல் உயிர்புகும் புக்கில் 
செயப்பாட்டு வினையால் தெரிந்து உணர்வு அரியது 
அவ்வுயிர்க்கு அன்பினை; ஆயின் ஆய்தொடி 
எவ்வுயிர்க்கும் ஆயினும் இரங்கல் வேண்டும்'.

    மணிமேகலையின் பேரழகு ஆடவர் கண்டு அகலமுடியாத அதிசயத்துக்குரியது.

                                                         'பாவையை 
ஆடவர் கண்டால் அகறலும் உண்டோ?
பேடியர் அன்றோ பெற்றியின் நின்றிடின்'.

    வெயில்  நுழையாத செறிவும், குயில் நுழையும் சிறப்பும் பெற்ற சோலையில் தும்பி குழலிசை வழங்குவதையும், வண்டினம் யாழிசை பொழிவதையும் அரங்கிலே மயில் ஆடல் நல்குவதையும் அதை மந்திகள் கண்டு மகிழ்வதையும் அகவற்பாவில் நாம் அவாவுறக் கூறுகிறது பகுதி இது:

'குழலிசைத் தும்பி கொளுத்திக் காட்ட 
மழலை வண்டினம் நல்லியாழ் செய்ய 
வெயில் நுழைபு அறியாக் குயில் நுழை பொதும்பர் 
மயில்ஆடு அரங்கில் மந்திகாண் பனகாண்'.

    உவனத்தில் பல்வேறு மலர்கள், மலர்ந்திருக்கும் அழகுக் காட்சி, ஓவியம் வல்லவர் வரைந்த சித்திரம் போர்வை போர்த்தது போல் உள்ளது என்று இயற்கையழகுக்குச் செயற்கையழகை உவமையாக்கும் திறம் போற்றத்தக்கது.

'செருந்தியும் வேங்கையும் பெருஞ்சண் பகமும் 
எரிமலர் இலவமும் விரிமலர் பரப்பி வித்தகர் இயற்றிய விளங்கிய கைவினைச் 
சித்திரச் செய்கைப் படாம்போர்த் ததுவே 
ஒப்பத் தோன்றிய உவவனம்'.

சாத்தனார் காப்பியத்தில் தமிழ்க் கூத்தைக் காண்கிறோம்.

கருத்துரையிடுக

1 கருத்துகள்

  1. Manimeghalai's encounter with a severely disturbed individual. The song unfolds describing her encounter with a mad man on the way to the flower garden:

    "Shoulders adorned with a garland of pink 'allari'*
    Neck adorned with a garland of bad odoured errukai* flowers
    Twigs of the mighty free has he gathered to hold together,
    tatters on this person, his entire body smeared with white paste of ash and sandal.
    Talks he with others in a senseless blabber, he cries, he falls, he blurts,
    he shouts, he worships, he bellows, he gets up, he twists, he circles, he runs,
    he moves to a corner and lies down, he shouts and picks up a quarrel with his shadow
    And verily behind the mad young man, who is hapless to functionless
    The people stand around and gape at this tragedy."

    இதனை தமிழில் காவியத்தில் எப்படி எழுபட்டுள்ளது என சொல்ல முடியுமா?

    நன்றி

    பதிலளிநீக்கு