இந்நூலையும் குமரகுருபரரே பாடினார். குமரகுருபரர் தருமபுரம் சென்று அங்கிருந்த மாசிலாமணி தேசிகரிடம் ஞானோபதேசம் பெற விரும்வினார். தேசிகரின் விருப்பப்படி சிதம்பரம் செல்லப் புறப்பட்ட குமரகுருபரர் வழியில் வைத்தீஸ்வரன் கோயிலை அடைந்தார். அங்கே எழுந்தருளி இருக்கும் குமரக் கடவுளைக் கண்டு, காதல் மீதூறத் தொழுது, பின்பு அவர் மீது 'முத்துக்குமாரசாமி பிள்ளைத் தமிழ்' பாடினார்.
வைத்தீஸ்வரன் கோயில் என்று இன்று வழங்கப்பெறும் ஊரின் பழைய பெயர், புள்ளிருக்கு வேளூர் என்பதாகும். சம்பாதி, சடாயு, இருக்கு வேதம், குமரக் கடவுள், சூரியன் ஆகியோர் சிவபிரானை வழிபட்ட தலமே புள்ளிருக்கு வேளூர் ஆகும். இங்குள்ள சிவன் கோயிலில் முத்துக் குமாரசாமி சந்நிதி உள்ளது. குமரகுருபரர் இம்முத்துக் குமாரசுவாமியின் பெருமைகளை 'முத்துக் குமாரசுவாமி பிள்ளைத் தமிழ்' நூலில் விளங்கக் கூறியுள்ளார்.
முத்துக்குமரன், முக் கண்ணணோடு விளையாடும் போது செய்யும் சிறு குறும்புச் செயல்களைப் படிப்பவர் களி கூரக் கூறுகின்றார் குமரகுருபரர். குமரன் தந்தையின் மார்பில் நின்று குரவைக் கூத்தாடுவது, அவர் ஏந்திய பறையை முழக்குவது , கரத்திருக்கும் நெருப்பைக் கங்கை நீர் பெய்து அணைப்பது, பிறை மதியைப் பிடித்துப் பாம்பின் வாயில் திணிப்பது, சடைக்காட்டின் கங்கையாற்றில் கண்கள் சிவக்க நீராடுவது முதலிய குறும்புச் செயல்களைக் கரும்புக் கவிதையில் வருணிக்கின்றார் கவிஞர்.
மழவுமுதிர் கனிவாய்ப் பசுந்தேறல் வெண்துகில்
மடித்தலம் நனைப்ப அம்மை
மணிவயிறு குளிரத் தவழ்ந்தேறி எம்பிரான்
மார்பினில் குரவையாடி
முழவுமுதிர் துடியினில் சிறுபறை முயக்கியனல்
மோலிநீர் பெய்தவித்து
முளைமதியை நெளியரவின் வாய்மடுத்து இளமானின்
முதுபசிக்கு அறுகருத்தி
விழவுமுதிர் செம்மேனி வெண்ணீறு துகந்தெழு
மிகப்புழுதி யாட்டயர்ந்து
விரிசடைக்காட்டினின் திருவிழிகள் சேப்பமுழு
வெள்ளநீர்த் துளையம் ஆடிக்
குழவுமுதிர் செல்விப் பெருங்களி வரச்சிறு
குறும்புசெய் தவன் வருகவே
குரவுகமழ் தருகந்த புரியில் அருள் குடிகொண்ட
குமரகுரு பரன் வருகவே.
0 கருத்துகள்