முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பிள்ளைத் தமிழ்

     தான் போற்றும் தெய்வத்தையோ அரசனையோ, சான்றோரையோ குழந்தையாக்கிப் பார்த்துப் பரவசத்துடன் பாடப்படும் சிற்றிலக்கியம், "பிள்ளைத் தமிழ்".  இதனைப் பிள்ளைப் பாட்டு என்றும், பிள்ளைக்கலி என்றும் வழங்குவது உண்டு.

    குழந்தையின் மூன்றாம் திங்கள் முதல் இருபத்தோராம் திங்கள் வரை, இரண்டு திங்களுக்கு ஒரு பருவமாகப் பகுத்துக் கொள்வது மரபு.  எனவே மூன்று, ஐந்து , ஏழு, ஒன்பது, பதினொன்று, பதிமூன்று, பதினைந்து, பதினேழு, பத்தொன்பது, இருபத்தொன்று எனப் பத்துப் பருவங்கள் அமையும்.

    அவ்வப் பருவத்தில் குழந்தைக்கு இயல்பாக உள்ள நிலை, செயல், தன்மை முதலியவற்றை அமைத்துப் பாடுவர் .  இப்பிள்ளைத் தமிழ் ஆண்பாற் பிள்ளைத் தமிழ், பெண்பாற் பிள்ளைத் தமிழ் என இரு வகைப்படும்.

    காப்புப் பருவம், தாலப் பருவம், செங்கீரைப் பருவம், சப்பாணிப் பருவம், முத்தப்பருவம், வருகைப் பருவம், அம்புலிப் பருவம், சிறுபறைப் பருவம், சிற்றில் பருவம், சிறுதேர்ப் பருவம், என்னும் பத்தும் ஆண்பாற் பிள்ளைத் தமிழுக்குரியன, இதை 

சாற்றறிய காப்ப தால் செங்கீரை சப்பாணி 

மாற்றரிய முத்தமே வாரானை - போற்றரிய 

அம்புலியே ஆய்த்த சிறுபறையே சிற்றிலே 

பம்புசிறு தேரோடும் பத்து.

என்று 'வெண்பாப் பாட்டியல்' எனும் இலக்கண நூல் இயம்பும்.

    பெண்பாற் பிள்ளைத் தமிழுக்கும் மேற்சொன்னவற்றுள் முதல் ஏழு பருவங்கள் பொருந்தும்; இறுதியிலுள்ள சிறுபறை, சிற்றில், சிறுதேர் ஆகிய மூன்று பருவங்களை நீக்கி, அவற்றுக்குப் பதில், கழங்குப் பருவம், அம்மானைப் பருவம், ஊசற் பருவம் என்னும் மூன்றையும் கொள்வர்.

    இறுதி மூன்று பருவங்களுக்கு 17, 19, 21 திங்கள் எனக் கொள்வதற்குப் பதிலாக மூன்றாம் ஆண்டு, ஐந்தாம் ஆண்டு, ஏழாம் ஆண்டு என்று ஆண்டு முறையைக் கொள்வது உண்டு. சிற்றில் சிதைத்தல், சிறுபறை கொட்டல் முதலிய செயல்களுக்கு 21 திங்கள் என்னும் பருவ முறை பொருந்தவில்லை.  3, 5, 7 என்னும் ஆண்டு முறையே பொருந்துதல் காண்க.

    பிள்ளைத் தமிழ்ப் பாடல்கள் ஆசிரிய விருத்தப்பாவில் அமையும்.

    மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ், அமுதாம்பிகைப் பிள்ளைத் தமிழ், செங்கழுநீர் விநாயகர் பிள்ளைத் தமிழ், திருஞான சம்பந்தர் பிள்ளைத் தமிழ், திருநாவுக்கரசர் பிள்ளைத் தமிழ், சுந்தரமூர்த்தி பிள்ளைத் தமிழ், மாணிக்க வாசகர் பிள்ளைத்தமிழ், சேக்கிழார் பிள்ளைத் தமிழ் முதலியன பிள்ளைத் தமிழ் நூல்களில் புகழ்பெற்ற சிலவாகும்.  தற்காலத்தே முகியித்தீன் ஆண்டவர் பிள்ளைத் தமிழ், பாரதிதாசன் பிள்ளைத் தமிழ், மறைமலையடிகள் பிள்ளைத் தமிழ் முதலிய பிள்ளைத் தமிழ் நூல்கள் தோன்றியுள்ளன.









 




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2.நாலடியார்

           பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் திருக்குறளுக்கு அடுத்த சிறப்பைப் பெற்ற நூல், நாலடியார்.  திருக்குறள் இரண்டடிக் குறள் வெண்பாவால் இயன்ற நூல்.  நாலடியார், நான்கடி வெண்பாக்களால் இயற்றப்பட்ட நூல், குறளின் கருத்தையே ஓர் எடுத்துக்காட்டுடன் விளக்கிக் கூறும் அமைப்பைக் கொண்டவையே நாலடியார் பாடல்கள்.  எனவே இதைத் 'திருக்குறளின் விளக்கம்' என்று கொள்வர்.     'நாலடி' என்பதும் இதன் பெயரே.  இப்பெயர் 'ஆர்' என்னும் சிறப்பு விகுதி பெற்று 'நாலடியார்' ஆனது.  நூலில் 400 பாக்கள் இருப்பதால் சங்கத் தொகை நூல்போல, 'நாலடி நானூறு' எனவும் வழங்கப் படுகிறது.  பாரதியார் என்பது வேறுள பாரதியார்களைக் குறிக்காமல் சுப்பிரமணிய பாரதியாரையே குறிப்பது போல, நாலடியார் என்பது கீழ்க்கணக்கில் உள்ள நாலடிப் பாக்கள் பெற்ற  நூல்கள் எவற்றையும் குறிக்காது நாலடி ஒன்றையே குறிப்பது.  இந்நூலின் சிறப்பை உணர்த்தும் 'நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி' என்னும் பழமொழியும், 'பழகு தமிழ்ச் சொல்லருமை நால் இரண்டில்' என்னும் தனிப்பாடல் அடியும் நாலடியாரின் புகழைப்...

முத்தமிழ் வளர்த்த முச்சங்கம்

     நாட்டையும் மக்களையும் காப்பதைக் கடனாகக் கொண்ட தமிழ் மன்னர்கள், மொழியைக் காப்பதையும் முக்கிய கடமையாகக் கருதினார்கள்.  சேர சோழ பாண்டியராகிய மூவேந்தர்களும் புலவர்களை ஆதரித்து மொழியின் சிறப்புக்கும் இலக்கிய வளர்ச்சிக்கும் துணைநின்றனர்.  அவருள்ளும்  பாண்டியர் சங்கம் கண்டு தமிழ் வளர்த்த பெருமை பெற்றனர்.  இதனால் செந்தமிழையும் செழியனையும் இணைத்துப் பேசும் மரபும் ஏற்பட்டதைப்  பின்வரும் சான்றுகள் விளக்கும். "வீயாத் தமிழுடையான்  பல்வேற் கடற்றானைப் பாண்டியன்"           - யாப்பருங்கலக் காரிகை மேற்கோள் செய்யுள்  "பாடு தமிழ் வளர்த்த கூடல் "            -புறத்திரட்டு  "சோமன் வழிவந்த பாண்டிய நின்  நாடுடைத்து நல்ல தமிழ்"           திருமுருகாற்றுப்படை உரையில் நச்சினார்க்கினியர் வழங்கும் மேற்கோள் . "வித்த யாண்ட விளம்பழையன் மாறனையும்"           -பதிற்றுப்பத்து பதிகம்       பாண்டிய மன்னர்கள் தம் தலைநகரில் ச...

கீழ்க்கணக்கு மேல்கணக்குப் பிரிவு

  கணக்கு - நெடுங்கணக்கு      சங்க இலக்கிய நூல்களையும் சங்கம் மருவிய காலத்து நூல்களையும் முறையே பதினெண் மேல்கணக்கு, பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் எனப் பிரிப்பது மரபு.  இவற்றைத் தமிழ்விடு தூது,                                                                           'மூத்தோர்கள்  பாடியருள் பத்துப் பாட்டும் எட்டுத் தொகையும்  கேடில் பதினெட்டுக் கீழ்க்கணக்கும்'     என்று மொத்தமாகக் குறிப்பிடுகிறது.     கணக்கு என்னும் சொல் தற்காலத்தே எண் தொடர்பான கணிதத்தைக் குறிக்கும் பண்டைக் காலத்தில், கணக்கு என்பது எழுத்துகளையும் , எழுத்தினால் இயற்றப்பட்ட இலக்கியங்களையும் குறித்தது.     தமிழ் மொழியின் உயிர்,மெய் எழுத்துகளை நெடுங்கணக்கு என வழங்கினர். இலக்கியங்களைக் கணக்கு என வழங்கியதைப் பதினெண் கீழ...