முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மூவருலா

     விக்கிரம சோழன் உலா, குலோத்துங்க சோழன் உலா, இராசராசன் சோழன் உலா ஆகிய மூன்றும் மூவருலா என வழங்கப் பெறும் மூன்றையும் இயற்றியவர் ஒட்டக்கூத்தர்.

    கலம்பகங்களில் நந்திக் கலம்பகம் தமிழக வரலாறு கூறும் நூலாகத் திகழ்வது போல, உலா நூல்களில் மூவருலா வரலாற்று நூலாக அமைந்துள்ளது.

    விக்கிரம சோழன், இரண்டாம் குலோத்துங்க சோழன், இரண்டாம் இராசராசன் ஆகிய மூவர் அவையிலும் வீற்றிருந்த பேறு பெற்றவர், ஒட்டக்கூத்தர்.  இதனால் சோழர் வரலாற்றைத் துல்லியமாக அறியும் வாய்ப்புக் கிடைத்தது.  தாமறிந்த வரலாற்றை இம்மூன்று உலாக்களிலும் தொடுத்து, சோழர் வரலாற்றுக் களஞ்சியமாக இவற்றை மாற்றிவிட்டார்.

    பாட்டுடைத் தலைவர்கள் இவர்க்குத் தக்கபடி பரிசளித்தனர்.  இராசராச சோழன் உலாவை அரங்கேற்றிய போது , ஒவ்வொரு கண்ணிக்கும் அவ்வரசன் ஆயிரம் பொன் பரிசாகக் கொடுத்தான்.  மற்றொரு வேந்தன் அரிசிலாற்றங்கரையிலிருந்த ஓர் ஊரை இவருக்குப் பரிசாக அளித்தான்.  அவ்வூர் கூத்தனூர் என்று இவர் பெயரால் வழங்கி வருகின்றது.

     மூவருலாவின் வரலாற்றுச் சிறப்பினைப் பின்வரும் கண்ணிகளால் அறியலாம்.

விசயாலயச் சோழன் 

'சீறுஞ் செருவில் திருமார்பில் தொண்ணூறும் 
ஆறும் படுதழும்பின் ஆகத்தோன்'.

முதலாம் இராசராசன் 

'ஏறிப் பகலொன்றில் எச்சுரமும் போய் உதகை 
நூறித்தன் தூதனை நோக்கினான்."

முதலாம் இராசேந்திரன் 

'கங்கா நதியும் கடாரமும் கைவரச் 
சிங்கா தனத்திருந்த செம்பியர் கோன் "

    மேற்கண்ட மூன்று கண்ணிகளும் குலோத்துங்க சோழனின் உலாவில் வருபவை.  பேதைப் பருவம் என்பது காதலை அறியாச் சிறு பருவம்.  அந்தப் போதைச் சிறுமியைக் கவி மேதை ஒட்டக்கூத்தர் ஓவியமாய்த் தீட்டிக் காட்டுவதைக் காண்போம்.

பேதை 

'வந்த பிறந்து வளரும் இளந்திங்கள்  
கொந்து முகிழாக் கொழுங்கொழுந்து பைந்தழைத் 
தோகை தொடா மஞ்ஞை சூடுண்டுதோற்றவன் மேல் 
வாகை புனைய வளர் கரும்பு கோகுலத்தின் 
பிள்ளை இள அன்னப்பேடை பிறந்தணிய 
கிள்ளை பவளம் கிளைத்த கிளை."

(விக்கிரம சோழன் உலா )

    கவிச் சக்கரவர்த்தி ஒட்டக் கூத்தரின் புகழ் இம் மூவருலாவில் உலா வரக் காணலாம்.




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2.நாலடியார்

           பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் திருக்குறளுக்கு அடுத்த சிறப்பைப் பெற்ற நூல், நாலடியார்.  திருக்குறள் இரண்டடிக் குறள் வெண்பாவால் இயன்ற நூல்.  நாலடியார், நான்கடி வெண்பாக்களால் இயற்றப்பட்ட நூல், குறளின் கருத்தையே ஓர் எடுத்துக்காட்டுடன் விளக்கிக் கூறும் அமைப்பைக் கொண்டவையே நாலடியார் பாடல்கள்.  எனவே இதைத் 'திருக்குறளின் விளக்கம்' என்று கொள்வர்.     'நாலடி' என்பதும் இதன் பெயரே.  இப்பெயர் 'ஆர்' என்னும் சிறப்பு விகுதி பெற்று 'நாலடியார்' ஆனது.  நூலில் 400 பாக்கள் இருப்பதால் சங்கத் தொகை நூல்போல, 'நாலடி நானூறு' எனவும் வழங்கப் படுகிறது.  பாரதியார் என்பது வேறுள பாரதியார்களைக் குறிக்காமல் சுப்பிரமணிய பாரதியாரையே குறிப்பது போல, நாலடியார் என்பது கீழ்க்கணக்கில் உள்ள நாலடிப் பாக்கள் பெற்ற  நூல்கள் எவற்றையும் குறிக்காது நாலடி ஒன்றையே குறிப்பது.  இந்நூலின் சிறப்பை உணர்த்தும் 'நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி' என்னும் பழமொழியும், 'பழகு தமிழ்ச் சொல்லருமை நால் இரண்டில்' என்னும் தனிப்பாடல் அடியும் நாலடியாரின் புகழைப்...

முத்தமிழ் வளர்த்த முச்சங்கம்

     நாட்டையும் மக்களையும் காப்பதைக் கடனாகக் கொண்ட தமிழ் மன்னர்கள், மொழியைக் காப்பதையும் முக்கிய கடமையாகக் கருதினார்கள்.  சேர சோழ பாண்டியராகிய மூவேந்தர்களும் புலவர்களை ஆதரித்து மொழியின் சிறப்புக்கும் இலக்கிய வளர்ச்சிக்கும் துணைநின்றனர்.  அவருள்ளும்  பாண்டியர் சங்கம் கண்டு தமிழ் வளர்த்த பெருமை பெற்றனர்.  இதனால் செந்தமிழையும் செழியனையும் இணைத்துப் பேசும் மரபும் ஏற்பட்டதைப்  பின்வரும் சான்றுகள் விளக்கும். "வீயாத் தமிழுடையான்  பல்வேற் கடற்றானைப் பாண்டியன்"           - யாப்பருங்கலக் காரிகை மேற்கோள் செய்யுள்  "பாடு தமிழ் வளர்த்த கூடல் "            -புறத்திரட்டு  "சோமன் வழிவந்த பாண்டிய நின்  நாடுடைத்து நல்ல தமிழ்"           திருமுருகாற்றுப்படை உரையில் நச்சினார்க்கினியர் வழங்கும் மேற்கோள் . "வித்த யாண்ட விளம்பழையன் மாறனையும்"           -பதிற்றுப்பத்து பதிகம்       பாண்டிய மன்னர்கள் தம் தலைநகரில் ச...

கீழ்க்கணக்கு மேல்கணக்குப் பிரிவு

  கணக்கு - நெடுங்கணக்கு      சங்க இலக்கிய நூல்களையும் சங்கம் மருவிய காலத்து நூல்களையும் முறையே பதினெண் மேல்கணக்கு, பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் எனப் பிரிப்பது மரபு.  இவற்றைத் தமிழ்விடு தூது,                                                                           'மூத்தோர்கள்  பாடியருள் பத்துப் பாட்டும் எட்டுத் தொகையும்  கேடில் பதினெட்டுக் கீழ்க்கணக்கும்'     என்று மொத்தமாகக் குறிப்பிடுகிறது.     கணக்கு என்னும் சொல் தற்காலத்தே எண் தொடர்பான கணிதத்தைக் குறிக்கும் பண்டைக் காலத்தில், கணக்கு என்பது எழுத்துகளையும் , எழுத்தினால் இயற்றப்பட்ட இலக்கியங்களையும் குறித்தது.     தமிழ் மொழியின் உயிர்,மெய் எழுத்துகளை நெடுங்கணக்கு என வழங்கினர். இலக்கியங்களைக் கணக்கு என வழங்கியதைப் பதினெண் கீழ...