முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழ் விடு தூது

    தன் உள்ளத்துக்குகந்த ஒரு பொருளையே தூதுப் பொருளாகத் தேர்ந்தெடுப்பது சிறப்புடைத்து.  தமிழினும் உள்ளத்துகந்த பொருள் எது? அதனால் தமிழ் வளர்க்கும் மதுரையில் குடியிருக்கும்  சொக்கநாதர் மீது மிக்க காதல் கொண்ட காரிகை, தன்  காதல் நோயை அவரிடம் தக்கபடி உரைத்து  தமிழைத் தூது விட்டாள்.  அதுவே 'தமிழ் விடு தூது'.

    'தமிழ் விடு தூது' என்னும் சிறந்த தூது நூலை இயற்றியவர் இன்னார் என்பது தெரியவில்லை.  தமிழையே உணவாய், உணர்வாய், உயிராய்க் கொண்ட தண்டமிழ்ப் பக்தர் - தாய் மொழிப் பித்தர் இந்தக் கவிஞர் என்பது தெரிகின்றது. செந்தமிழும் சைவமும் இரு விழிகளாய்க் கொண்டவர் இந்த கவிஞர் என்பதும் புரிகின்றது.  இவரது காலம் கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டிற்குப் பிற்பட்டது என்று கூற முடிகிறதேயன்றி, இவர் காலத்தை உறுதியாகக் கூற இயலவில்லை.

    தலைவி தமிழின் பெருமையைக் கூறும் பகுதி தமிழ் மொழியின் வரலாற்றையே உள்ளடக்கியதாகவுள்ளது.

    முதலில் சிவபிரான், தடாதகைப் பிராட்டியார், விநாயகர், முருகன் ஆகிய நால்வருக்கும் நூல் வணக்கம் தெரிவிக்கின்றது.  பின் சம்பந்தர் முதலிய நால்வரையும், பின்னர் அகத்தியர், தொல்காப்பியர் முதலிய புலவர் பெருமக்களையும் குறிப்பிடுகின்றது.  தொடர்ந்து "எல்லாரும் நீயாய் இருந்தமையால்" என்று கூறுகின்றது.  எனவே,கவிஞர் தமிழைத் தெய்வமாகவும் செந்தமிழ்ப் புலவராகவும் கண்டு வணங்கும் சிறப்புப் புலப்படுகின்றது.


'அரியா சனம் உனக்கே யானால் உனக்குச் 

சரியாரும் உண்டோ தமிழே 

*****

தித்திக்கும் தெள்ளமுதாய்த் தெள்ளமுதின் மேலான 

முத்திக் கனியே என் முத்தமிழே புத்திக்குள் 

உண்ணப்படும் தேனே.

*****

முந்தியொளி யால்விளக்கும் முச்சுடர் என்பார் உனைப்போல் 

வந்தென் மனத்திருளை மாற்றுமோ?

    இவ்வாறு தமிழின் புகழைத் தலைவி உரைப்பதைப் படித்தாலும், நினைத்தாலும், தமிழன்பரின் உடல் சிலிர்க்கும், உயிர்சிலிர்க்கும்.

இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர் 

விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் .

என்னும் புகழ் வாய்ந்த வரிகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளவையே.

    'தமிழ் எங்கள் உயிருக்கு நேர்', 'எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு' என்பன போன்ற தமிழ் சிறப்புக் கூறும் பாரதிதாசன் பாடல்களுக்கெல்லாம் அடிப்படையாய் அமைந்தவை இந்த வரிகள்.






 




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2.நாலடியார்

           பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் திருக்குறளுக்கு அடுத்த சிறப்பைப் பெற்ற நூல், நாலடியார்.  திருக்குறள் இரண்டடிக் குறள் வெண்பாவால் இயன்ற நூல்.  நாலடியார், நான்கடி வெண்பாக்களால் இயற்றப்பட்ட நூல், குறளின் கருத்தையே ஓர் எடுத்துக்காட்டுடன் விளக்கிக் கூறும் அமைப்பைக் கொண்டவையே நாலடியார் பாடல்கள்.  எனவே இதைத் 'திருக்குறளின் விளக்கம்' என்று கொள்வர்.     'நாலடி' என்பதும் இதன் பெயரே.  இப்பெயர் 'ஆர்' என்னும் சிறப்பு விகுதி பெற்று 'நாலடியார்' ஆனது.  நூலில் 400 பாக்கள் இருப்பதால் சங்கத் தொகை நூல்போல, 'நாலடி நானூறு' எனவும் வழங்கப் படுகிறது.  பாரதியார் என்பது வேறுள பாரதியார்களைக் குறிக்காமல் சுப்பிரமணிய பாரதியாரையே குறிப்பது போல, நாலடியார் என்பது கீழ்க்கணக்கில் உள்ள நாலடிப் பாக்கள் பெற்ற  நூல்கள் எவற்றையும் குறிக்காது நாலடி ஒன்றையே குறிப்பது.  இந்நூலின் சிறப்பை உணர்த்தும் 'நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி' என்னும் பழமொழியும், 'பழகு தமிழ்ச் சொல்லருமை நால் இரண்டில்' என்னும் தனிப்பாடல் அடியும் நாலடியாரின் புகழைப்...

முத்தமிழ் வளர்த்த முச்சங்கம்

     நாட்டையும் மக்களையும் காப்பதைக் கடனாகக் கொண்ட தமிழ் மன்னர்கள், மொழியைக் காப்பதையும் முக்கிய கடமையாகக் கருதினார்கள்.  சேர சோழ பாண்டியராகிய மூவேந்தர்களும் புலவர்களை ஆதரித்து மொழியின் சிறப்புக்கும் இலக்கிய வளர்ச்சிக்கும் துணைநின்றனர்.  அவருள்ளும்  பாண்டியர் சங்கம் கண்டு தமிழ் வளர்த்த பெருமை பெற்றனர்.  இதனால் செந்தமிழையும் செழியனையும் இணைத்துப் பேசும் மரபும் ஏற்பட்டதைப்  பின்வரும் சான்றுகள் விளக்கும். "வீயாத் தமிழுடையான்  பல்வேற் கடற்றானைப் பாண்டியன்"           - யாப்பருங்கலக் காரிகை மேற்கோள் செய்யுள்  "பாடு தமிழ் வளர்த்த கூடல் "            -புறத்திரட்டு  "சோமன் வழிவந்த பாண்டிய நின்  நாடுடைத்து நல்ல தமிழ்"           திருமுருகாற்றுப்படை உரையில் நச்சினார்க்கினியர் வழங்கும் மேற்கோள் . "வித்த யாண்ட விளம்பழையன் மாறனையும்"           -பதிற்றுப்பத்து பதிகம்       பாண்டிய மன்னர்கள் தம் தலைநகரில் ச...

கீழ்க்கணக்கு மேல்கணக்குப் பிரிவு

  கணக்கு - நெடுங்கணக்கு      சங்க இலக்கிய நூல்களையும் சங்கம் மருவிய காலத்து நூல்களையும் முறையே பதினெண் மேல்கணக்கு, பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் எனப் பிரிப்பது மரபு.  இவற்றைத் தமிழ்விடு தூது,                                                                           'மூத்தோர்கள்  பாடியருள் பத்துப் பாட்டும் எட்டுத் தொகையும்  கேடில் பதினெட்டுக் கீழ்க்கணக்கும்'     என்று மொத்தமாகக் குறிப்பிடுகிறது.     கணக்கு என்னும் சொல் தற்காலத்தே எண் தொடர்பான கணிதத்தைக் குறிக்கும் பண்டைக் காலத்தில், கணக்கு என்பது எழுத்துகளையும் , எழுத்தினால் இயற்றப்பட்ட இலக்கியங்களையும் குறித்தது.     தமிழ் மொழியின் உயிர்,மெய் எழுத்துகளை நெடுங்கணக்கு என வழங்கினர். இலக்கியங்களைக் கணக்கு என வழங்கியதைப் பதினெண் கீழ...