முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கலிங்கத்துப் பரணி

     பரணி இலக்கியங்களில் மிகவும் பழமையானது 'கலிங்கத்துப் பரணி'.  இதுவே பரணி நூல்களில் தலை சிறந்தது என்று, அன்று முதல் இன்று வரை போற்றப்படுகின்றது.

    கலிங்கத்துப் பரணியை இயற்றியவர் சயங்கொண்டார்.  இவர் தீபங்குடி என்னும் ஊரினர்.  இவர் கி.பி. 1070 முதல் 1118 வரை ஆண்ட முதல் குலோத்துங்கன் காலத்தவர்.  குலோத்துங்கனின் படைத் தலைவனான கருணாகரத் தொண்டைமான், சோழப் பெரும் படையுடன் கலிங்க நாடு சென்று, வாகை சூடித் திரும்பினான்.  அதன் பின் குலோத்துங்கன் , சயங்கொண்டாரிடம் உரையாடிய போது , "கலிங்கம் வென்றமையால் யானும் சயங்கொண்டான் ஆயினன் "  என்று கூறினான்.  அதைக் கேட்ட புலவர், "அப்படியாயின் சயங்கொண்டானான உன்னைச் சயங்கொண்டானான யான் பாடுவது தகும் " என்று கூறினார்.  அதனால் பிறந்ததே 'கலிங்கத்துப் பரணி' என்று கூறுவர் .

    கலிங்கத்துப் பரணி மொத்தம் பதின்மூன்று பகுதிகளைக் கொண்டது.  அவையாவன: கடவுள் வாழ்த்து, கடைத்திறப்பு , காடு பாடியது, கோயில் பாடியது, தேவியைப் பாடியது, இந்திரசாலம், இராச பாரம்பரியம், பேய்முறைப்பாடு, அவதாரம், காளிக்குக் கூளி கூறியது.  போர் பாடியது, களம் பாடியது.  இவற்றுள் 'போர் பாடியது' பகுதியே கவிஞரின் ஆற்றலை முழுமையாக வெளிப்படுத்துகின்றது. 

    'போர் பாடியது' என்னும் பகுதி போலவே 'களம் பாடியது' பகுதியும் சிறப்பு மிக்கது.  வீரன் ஒருவன் களத்தே உயிர் துறந்து வீழ்கின்றான்.  அவன் உடல் நிலத்தைத் தீண்டுவதற்கு முன் அவன் மனைவி களத்தே ஓடி அவனைத் தாங்கிக் கொள்கின்றாள்.  வீரனின் உயிர் விண்ணுலகம் செல்கின்றது.  அங்கேயும் அவனை, தேவ மகளிர் தழுவா முன்னம், தானே சென்று தழுவிக் கொள்ள, அவள் உயிர் விட்டாளாம்.  களத்தே கணவன் இறக்க அவன் மனைவி அக்கணமே உயிர் துறக்கும் கற்பின் மேன்மையைச் சயங்கொண்டாரின் பின் வரும் பாடல் விளங்குகின்றது.

'தரைமகள் தன் கொழுநன்தன் உடலம் தன்னைத் 
    தாங்காமல் தன்னுடலால் தாங்கி விண்ணாட்டு 
அரமகளிர் அவ்வுயிரைப் புணரா முன்னம் 
    ஆவியொக்க விடுவாளைக் காண்மின் காண்மின்."

    களத்தே வீழ்ந்து  கிடக்கும் கணவனைக் கண்டு மறக்குலத்து மனைவி கேட்கும் வினாக்கள், அவலச்சுவை மிக்க அழியாத கவிதையாகும்.

"பொருதடக்கை வாளெங்கே? மணிமார் பெங்கே ?
    போர் முகத்தில் எவர்வரினும் புறங்கொடாத 
பருவயிரத் தோளெங்கே? எங்கே? என்று 
    பயிரவியைக் கேட்பாளைக் காண்மின் காண்மின் '

    'கலிங்கத்துப் பரணி' யின் இத்தகைய சிறப்பைக் கண்டே இதனை, 'தென் தமிழ்த் தெய்வப் பரணி' என்று கூத்தர் பாராட்டினார்.  சயங்கொண்டாரையும் 'கவிச் சக்கரவர்த்தி' என்று தமிழுலகம் போற்றி வருகின்றது.




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2.நாலடியார்

           பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் திருக்குறளுக்கு அடுத்த சிறப்பைப் பெற்ற நூல், நாலடியார்.  திருக்குறள் இரண்டடிக் குறள் வெண்பாவால் இயன்ற நூல்.  நாலடியார், நான்கடி வெண்பாக்களால் இயற்றப்பட்ட நூல், குறளின் கருத்தையே ஓர் எடுத்துக்காட்டுடன் விளக்கிக் கூறும் அமைப்பைக் கொண்டவையே நாலடியார் பாடல்கள்.  எனவே இதைத் 'திருக்குறளின் விளக்கம்' என்று கொள்வர்.     'நாலடி' என்பதும் இதன் பெயரே.  இப்பெயர் 'ஆர்' என்னும் சிறப்பு விகுதி பெற்று 'நாலடியார்' ஆனது.  நூலில் 400 பாக்கள் இருப்பதால் சங்கத் தொகை நூல்போல, 'நாலடி நானூறு' எனவும் வழங்கப் படுகிறது.  பாரதியார் என்பது வேறுள பாரதியார்களைக் குறிக்காமல் சுப்பிரமணிய பாரதியாரையே குறிப்பது போல, நாலடியார் என்பது கீழ்க்கணக்கில் உள்ள நாலடிப் பாக்கள் பெற்ற  நூல்கள் எவற்றையும் குறிக்காது நாலடி ஒன்றையே குறிப்பது.  இந்நூலின் சிறப்பை உணர்த்தும் 'நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி' என்னும் பழமொழியும், 'பழகு தமிழ்ச் சொல்லருமை நால் இரண்டில்' என்னும் தனிப்பாடல் அடியும் நாலடியாரின் புகழைப்...

முத்தமிழ் வளர்த்த முச்சங்கம்

     நாட்டையும் மக்களையும் காப்பதைக் கடனாகக் கொண்ட தமிழ் மன்னர்கள், மொழியைக் காப்பதையும் முக்கிய கடமையாகக் கருதினார்கள்.  சேர சோழ பாண்டியராகிய மூவேந்தர்களும் புலவர்களை ஆதரித்து மொழியின் சிறப்புக்கும் இலக்கிய வளர்ச்சிக்கும் துணைநின்றனர்.  அவருள்ளும்  பாண்டியர் சங்கம் கண்டு தமிழ் வளர்த்த பெருமை பெற்றனர்.  இதனால் செந்தமிழையும் செழியனையும் இணைத்துப் பேசும் மரபும் ஏற்பட்டதைப்  பின்வரும் சான்றுகள் விளக்கும். "வீயாத் தமிழுடையான்  பல்வேற் கடற்றானைப் பாண்டியன்"           - யாப்பருங்கலக் காரிகை மேற்கோள் செய்யுள்  "பாடு தமிழ் வளர்த்த கூடல் "            -புறத்திரட்டு  "சோமன் வழிவந்த பாண்டிய நின்  நாடுடைத்து நல்ல தமிழ்"           திருமுருகாற்றுப்படை உரையில் நச்சினார்க்கினியர் வழங்கும் மேற்கோள் . "வித்த யாண்ட விளம்பழையன் மாறனையும்"           -பதிற்றுப்பத்து பதிகம்       பாண்டிய மன்னர்கள் தம் தலைநகரில் ச...

கீழ்க்கணக்கு மேல்கணக்குப் பிரிவு

  கணக்கு - நெடுங்கணக்கு      சங்க இலக்கிய நூல்களையும் சங்கம் மருவிய காலத்து நூல்களையும் முறையே பதினெண் மேல்கணக்கு, பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் எனப் பிரிப்பது மரபு.  இவற்றைத் தமிழ்விடு தூது,                                                                           'மூத்தோர்கள்  பாடியருள் பத்துப் பாட்டும் எட்டுத் தொகையும்  கேடில் பதினெட்டுக் கீழ்க்கணக்கும்'     என்று மொத்தமாகக் குறிப்பிடுகிறது.     கணக்கு என்னும் சொல் தற்காலத்தே எண் தொடர்பான கணிதத்தைக் குறிக்கும் பண்டைக் காலத்தில், கணக்கு என்பது எழுத்துகளையும் , எழுத்தினால் இயற்றப்பட்ட இலக்கியங்களையும் குறித்தது.     தமிழ் மொழியின் உயிர்,மெய் எழுத்துகளை நெடுங்கணக்கு என வழங்கினர். இலக்கியங்களைக் கணக்கு என வழங்கியதைப் பதினெண் கீழ...