பெண்பாற் பிள்ளைத் தமிழில் மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழுக்கு அடுத்த நிலையில் விளங்கும் சிறப்புப் பெற்றது. 'திருநெல்வேலிக் காந்தியம்மை பிள்ளைத் தமிழ்'. இந்நூலைப் பாடியவர் திருநெல்வேலியைச் சார்ந்த தச்சன் நல்லூரில் வாழ்ந்த அழகிய சொக்கநாதர். இவர் பத்தொன்பதாம் நூற்றாண்டினர் .
சிறுமி காந்தியம்மையைக் கவிஞர் 'வருக வருக' என்றழைக்கும் வருகைப் பருவம் சிறப்பு மிக்கது .
வாரா திருந்தால் இனிநான் உன்
வடிவேல் விழிக்கு மைஎழுதேன்
மதிவாள் நுதற்குத் திலகமிடேன்
மணியால் இழைத்த பணிபுனையேன்
பேரா தரத்தினொடு பழக்கம்
பேசேன்; சிறிதும் முகம்பாரேன்
பிறங்கு சுவைப்பால் இனிதூட்டேன்
பிரியமுடன் ஓக்கலையின் வைத்துத்
தேரார் வீதி வளம் காட்டேன்
செய்யக் கனிவாய் முத்தமிடேன்;
திகழு மணித்தொட்டிலில் ஏற்றித்
திருக்கண் வளரச் சீராட்டேன்;
தாரார் இமவான் தடமார்பில்
தவழும் குழந்தையாய் வருகவே
சாலிப் பதிவாழ் காந்திமதித்
தாயே! வருகவே!.
ஒரு தாயின் நிலையில் நின்று கவிஞர் பாடிய இப்பாடலை அரங்கேற்றும் போது, அங்கே இராசவல்லி புரத்தைச் சேர்ந்த முத்துசாமி என்னும் வள்ளல் வீற்றிருந்தார். அவர், பாடலில் உள்ளம் பறி கொடுத்து, உணர்ச்சி பொங்க எழுந்து தாம் அணிந்திருந்த விலை மதிப்பற்ற வைரக் கடுக்கனைக் கழற்றிக் கவிஞர் காதுகளில் அணிவித்தார்.
அழகிய சொக்கநாதர் வழங்கிய இப்பிள்ளைத் தமிழ் கற்பாரைச் சொக்க வைக்கும் ஆற்றல் பெற்றது.
0 கருத்துகள்