முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூது

     சிற்றிலக்கியங்களில் ஒன்றான 'தூது' தொல்காப்பியக் காலத்தும் இலக்கியப் பிரிவாக இருந்த ஒன்று. ஒருவரிடம் ஒரு பொருளைப் பெற்று வருவதற்கு ஆற்றல் மிக்க மற்றொருவரை அனுப்புவது தூது.  போர்க்காலத்தே மன்னர் தூதனுப்புவது பண்டைய மரபு. ஒளவையாரும் அதிகமானின் தூதராகத் தொண்டைமானைக் கண்டு வந்ததைப் புறநானூறு உணர்த்தும்.  இது புறத்திணை சார்ந்த தூது.

    அகத்திணை சார்ந்த தூது, "காமம் மிக்க கழிபடற்கிளவி" யாகவே அமைந்துள்ளது.  அஃறிணைப்  பொருள்கள் தாம் கூறுவனவற்றைப் பிறரிடம் கூறும் ஆற்றலோ, அவர் கூறும் விடையை அறிந்து வந்து கூறும் ஆற்றலோ,  அற்றவை.  இதை உணர்ந்தும் தமது காதல் உணர்வின் மிகுதியினால் அஃறிணைப் பொருள்களைக் காதல் தூதாக அனுப்புதல் வழக்கமாகும்.

இதனை இலக்கணம் ஏற்றுக் கொண்டது.

'சொல்லா மரபின் அவற்றொடு கெழீஇச் 
செய்யா மரபில் தொழில்படுத் தடக்கியும்'

என்று தொல்காப்பியமும்,

'கேட்குந போலவும் கிளக்குந போலவும் 
இயக்குந போலவும் இயற்றுந போலவும் 
அஃறிணை மருங்கினும் அறையப் படுமே'

என்று நன்னூலும் கூறுகின்றன.

    தற்போதுள்ள நூல்களில் புறத்திணைத் தூது நூல்கள் ஒன்றேனும் இல்லை.  இருப்பன யாவும் அகத்திணை நூல்களே.

தூதின் இலக்கணம் :

    தலைவன் மேல் காதல் கொண்ட தலைவி ஒருத்தி, தனது காதல் துன்பத்தைத் தலைவனுக்குக் கூறி , 'மாலை வாங்கி வா' என்றோ தூது சொல்லி வா என்றோ உயர்திணைப் பொருளை அல்லது அஃறிணைப் பொருளை அனுப்புவதே 'தூது' என்னும் சிற்றிலக்கியமாகும்.  காதலனும் காதலியிடம் தூதனுப்புவதுண்டு.  இது அருகிய வழக்கே. 'விறலி விடு தூது' என்பது தலைவன் தன் மனைவியிடம் அனுப்பும் தூதாகும்.  பெரும்பான்மையான தூது நூல்கள், காதலி அனுப்பும் தூதுக்களாகவே அமைந்துள்ளன.

    'பயில்தருங் கலிவெண்பாவினாலே, உயர்திணைப் பொருளையும், அஃறிணைப் பொருளையும், சந்தியின் விடுத்தல் முந்துறு தூது' என்று கூறுகின்றது இலக்கண விளக்கம்.  தூத்துக்குரிய பொருள்கள் இவை என்பதைப் பின்வரும் வெண்பா விளக்குகின்றது.

இயம்புகின்ற காலத்து எகினம் மயில் கிள்ளை 
பயம்பெறு மேகம் பூவை பாங்கி - நயந்த குயில் 
பேதை நெஞ்சம் தென்றல் பிரமரம் ஈரைந்துமே 
தூதுரைத்து வாங்கும் தொடை 

    இப்பாடல், அன்னம் (எகினம்), மயில், கிளி, மேகம், நாகணவாய்ப்புள்(பூவை), பாங்கி (தோழி), குயில், நெஞ்சம், தென்றல், வண்டு (பிரமரம்) ஆகிய பத்தும் தூது விடுவதற்குரிய பொருள்கள் எனக் கூறுகின்றது. பத்தில் பாங்கி மட்டுமே உயர்திணைப் பொருளாகும். எனினும் 'பாங்கி விடு தூதாக' ஒரு நூலும் கிடைக்கவில்லை.

    பிற்காலப் புலவர்கள் மேற்குறித்த பத்துப் பொருள்களோடு நிறுத்திவிடாமல், வேறு பொருள்களையும் தூத்துக்குரிய பொருள்களாக்கிப் பாடியுள்ளார். நெல்விடு தூது, மான்விடு தூது, துகில் விடு தூது, பணவிடு தூது, புகையிலை விடு தூது, தமிழ் விடு தூது முதலிய பல்வேறு நூல்கள் வெளி வந்துள்ளன.

    காப்பியங்களிலும், புராணங்களிலும், தூது ஒரு பகுதியாக அமைந்துள்ளது.  கலம்பகம், அந்தாதி ஆகிய சிற்றிலக்கியங்களிலும் தூது ஓர் உறுப்பாக இடம் பெற்றுள்ளது.





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2.நாலடியார்

           பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் திருக்குறளுக்கு அடுத்த சிறப்பைப் பெற்ற நூல், நாலடியார்.  திருக்குறள் இரண்டடிக் குறள் வெண்பாவால் இயன்ற நூல்.  நாலடியார், நான்கடி வெண்பாக்களால் இயற்றப்பட்ட நூல், குறளின் கருத்தையே ஓர் எடுத்துக்காட்டுடன் விளக்கிக் கூறும் அமைப்பைக் கொண்டவையே நாலடியார் பாடல்கள்.  எனவே இதைத் 'திருக்குறளின் விளக்கம்' என்று கொள்வர்.     'நாலடி' என்பதும் இதன் பெயரே.  இப்பெயர் 'ஆர்' என்னும் சிறப்பு விகுதி பெற்று 'நாலடியார்' ஆனது.  நூலில் 400 பாக்கள் இருப்பதால் சங்கத் தொகை நூல்போல, 'நாலடி நானூறு' எனவும் வழங்கப் படுகிறது.  பாரதியார் என்பது வேறுள பாரதியார்களைக் குறிக்காமல் சுப்பிரமணிய பாரதியாரையே குறிப்பது போல, நாலடியார் என்பது கீழ்க்கணக்கில் உள்ள நாலடிப் பாக்கள் பெற்ற  நூல்கள் எவற்றையும் குறிக்காது நாலடி ஒன்றையே குறிப்பது.  இந்நூலின் சிறப்பை உணர்த்தும் 'நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி' என்னும் பழமொழியும், 'பழகு தமிழ்ச் சொல்லருமை நால் இரண்டில்' என்னும் தனிப்பாடல் அடியும் நாலடியாரின் புகழைப்...

முத்தமிழ் வளர்த்த முச்சங்கம்

     நாட்டையும் மக்களையும் காப்பதைக் கடனாகக் கொண்ட தமிழ் மன்னர்கள், மொழியைக் காப்பதையும் முக்கிய கடமையாகக் கருதினார்கள்.  சேர சோழ பாண்டியராகிய மூவேந்தர்களும் புலவர்களை ஆதரித்து மொழியின் சிறப்புக்கும் இலக்கிய வளர்ச்சிக்கும் துணைநின்றனர்.  அவருள்ளும்  பாண்டியர் சங்கம் கண்டு தமிழ் வளர்த்த பெருமை பெற்றனர்.  இதனால் செந்தமிழையும் செழியனையும் இணைத்துப் பேசும் மரபும் ஏற்பட்டதைப்  பின்வரும் சான்றுகள் விளக்கும். "வீயாத் தமிழுடையான்  பல்வேற் கடற்றானைப் பாண்டியன்"           - யாப்பருங்கலக் காரிகை மேற்கோள் செய்யுள்  "பாடு தமிழ் வளர்த்த கூடல் "            -புறத்திரட்டு  "சோமன் வழிவந்த பாண்டிய நின்  நாடுடைத்து நல்ல தமிழ்"           திருமுருகாற்றுப்படை உரையில் நச்சினார்க்கினியர் வழங்கும் மேற்கோள் . "வித்த யாண்ட விளம்பழையன் மாறனையும்"           -பதிற்றுப்பத்து பதிகம்       பாண்டிய மன்னர்கள் தம் தலைநகரில் ச...

கீழ்க்கணக்கு மேல்கணக்குப் பிரிவு

  கணக்கு - நெடுங்கணக்கு      சங்க இலக்கிய நூல்களையும் சங்கம் மருவிய காலத்து நூல்களையும் முறையே பதினெண் மேல்கணக்கு, பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் எனப் பிரிப்பது மரபு.  இவற்றைத் தமிழ்விடு தூது,                                                                           'மூத்தோர்கள்  பாடியருள் பத்துப் பாட்டும் எட்டுத் தொகையும்  கேடில் பதினெட்டுக் கீழ்க்கணக்கும்'     என்று மொத்தமாகக் குறிப்பிடுகிறது.     கணக்கு என்னும் சொல் தற்காலத்தே எண் தொடர்பான கணிதத்தைக் குறிக்கும் பண்டைக் காலத்தில், கணக்கு என்பது எழுத்துகளையும் , எழுத்தினால் இயற்றப்பட்ட இலக்கியங்களையும் குறித்தது.     தமிழ் மொழியின் உயிர்,மெய் எழுத்துகளை நெடுங்கணக்கு என வழங்கினர். இலக்கியங்களைக் கணக்கு என வழங்கியதைப் பதினெண் கீழ...