IV சோழர் காலம்
கி.பி. 850 - 1350
ஐம்பெருங் காப்பியங்கள்
சீவக சிந்தாமணி
ஐம்பெருங் காப்பியங்களைக் கூறும் போது, காலத்தே பிற்பட்ட சீவக சிந்தாமணியை முற்பட மொழிதல் மரபு. காப்பியத்தின் செம்மையான அமைப்பை முழுமையாகப் பெற்று , பின்னே எழுந்த காப்பியங்களுக்கு வழிகாட்டியாகி, சமண காப்பியம் ஆயினும் ஏனைய சமயத்தவராலும் ஏற்றிப் போற்றப்படுவதால் இதனை முதலாவதாக அமைத்தனர் போலும். தமிழ் காப்பியங்களில் பழைய உரை பெற்றவை இரண்டு. அவை சிலப்பதிகாரமும் சிந்தாமணியுமாம். சங்க நூல்கள் பலவற்றுக்கு உரை வகுத்த உச்சிமேல் புலவர் கொள்ளும் நச்சினார்க்கினியரின் அறிவுரயைப் பெற்றிருப்பதும் இந்நூலுக்கு ஒரு சிறப்பாகும்.
சீவக சிந்தாமணியை இயற்றிய மாபெரும் கவிஞர் திருத்தக்கதேவர். இவரைத் திருத்தகு முனிவர், திருத்தகு மகாமுனிவர், திருத்தக்க மகாமுனிகள், தேவர் என்னும் வேறு பெயர்களாலும் குறிப்பிடுவர். தேவர் ஒரு சமணத் துறவி. ஆன்ற புலமை பெற்ற சான்றோர் ஒருவரை ஆசிரியராகக் கொண்டு, கற்பன யாவும் கற்றுத் தேர்ந்தார் . இவர் மதுரையில் இருந்த தமிழ்ச் சங்கத்துக்குச் சென்ற போது, "சமணத் துறவிகளால் இன்பச் சுவை மிக்க நூலை இயற்ற முடியாது" என்று சிலர் கூறினர். இக்கூற்றை மறுப்பதற்காகவே திருத்தக்கதேவர் இன்பச் சுவை மிகுந்த சீவக சிந்தாமணியை இயற்றினார். இவ்வின்பக் காப்பியத்தை இயற்ற ஆசிரியரிடம் அனுமதி கோரினார் தேவர். இவரது திறத்தினையும் மனநிலையினையும் அறிவதற்காக, வழியே சென்ற நரியைக் காட்டி, "இந் நரியைப் பொருளாகக் கொண்டு ஒரு காப்பியம் இயற்று" என்று பணித்தார், ஆசிரியர். இவர் இளமை, யாக்கை, செல்வம் முதலியவற்றின் நிலையாமையை விளக்கும் 'நரி விருத்தம்' என்னும் காப்பியத்தை இயற்றினார். அதன் பின்னர் ஆசிரியர் அனுமதி அளிக்கத் தேனூறும் செந்தமிழ்க் காப்பியமாம் சீவக சிந்தாமணியைப் பாடி முடித்தார்.
எட்டாத இன்பங்களை எட்டிப் பிடிக்கும் இக்காப்பியத்தை எட்டே நாளில் எழுதி முடித்தது தேவரின் சாதனை.
சீவகசிந்தாமணியைத் தமிழ்ச் சங்கத்தில் அரங்கேற்றிச் சமணத் துறவிகளின் கவியாற்றலை நிறுவினார் திருத்தக்கதேவர் . தொட்ட இடமெல்லாம் இன்பச் சுவைத் தட்டுப்படுவதும், எட்டுப் பெண்களை மணந்த சீவகனின் காதல் வேட்கையினையும், விரும்பியவரை அடைந்து பெற்ற சுகத்தையும் வர்ணிக்கும் காப்பியத்தைச் சுவைத்த புலவர்கள் , "காமச் சுவை நிறைந்த நூலை இயற்றியவரும் காமச் சுவையை அனுபவித்தவராக இருப்பாரோ" என ஐயுற்றனர். திருத்தக்க தேவர் துறவினது தூய்மையை நிலைநாட்ட விரும்பி "துறவு ஒழுக்கத்தில் தவறி இருப்பின் பழுக்கக் காய்ச்சிய இரும்பு என்னைச் சுடுவதாக" எனக்கூறிப் பழுக்கக் காய்ச்சிய இரும்பைக் கையில் ஏந்தினார் என்றும், தீ தீண்டாத திண்மையராகத் திகழ, இவரது துறவின் மேன்மையைப் பிறர் அறிந்தனர் என்றும் கூறும் கதை ஒன்று வழங்கி வருகின்றது.
திருத்தக்கதேவர் சோழர் குடியைச் சார்ந்தவர் எனக் கூறுவர் கி.பி ஒன்பதாம் நூற்றாண்டே இவர் வாழ்ந்த காலம்.
இவர் தீபங்குடியிலிருந்த திரமிளச் சங்கத்தைச் சார்ந்தவர் என்றும் கூறுவர். வடமொழியில் உள்ள க்ஷத்திர சூடாமணி, கத்திய சிந்தாமணி, ஸ்ரீ புராணம் முதலிய பல நூல்களில் உள்ள சீவகன் கதையைத் தழுவி இக்காப்பியம் அமைத்தார்.
சீவகன் எட்டு மகளிரை மணக்கின்றான். மேலும் சீவகன் கல்வி கற்றதைக் கூறும்போது, 'ஞானம் என்னும் குமரியைப் புணர்க்கலுற்றார்' என்று நாமகளை மணந்ததாகக் கூறுகின்றார். இவ்வாறே சீவகன் பகைவரை வென்று நாட்டை மீட்ட செயலை, 'சீவகன் மண்மகளை மணந்தான் என்றும், முடி சூடிய நிகழ்ச்சியைச் சீவகன், 'பூ மகளை மணந்தான்' என்றும், கேவல ஞானம் பெற்று முக்தி நிலை அடைவதை 'கேவல மடந்தையை மணந்தான்' என்றும், பொருத்தமுறப் புலவர் கூறுவதால் சீவகசிந்தாமணி மணநூல் என்றும் வழங்கப்பட்டது.
சீவக சிந்தாமணி சீவகனது கதையைக் கூறுகின்றது. ஏமாங்கத நாட்டில் இராசமாபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட சச்சந்தன், மனைவி விசையையிடம் கொண்ட மாறாக் காதலால் அரச கடமைகளை மறக்கின்றான். காலம் பார்த்திருந்த கட்டியங்காரன் என்னும் அமைச்சன் அரசனைக் கொன்று நாட்டைக் கைப்பற்றுகிறான். மயிற்பொறியில் உயிர் தப்பிய விசையை சுடுகாட்டில் சீவகனைப் பெற்று விட்டு மறைந்து வாழ்கின்றாள். இந்துக் கடன் என்னும் வணிகன் சீவகனைக் கண்டெடுத்து வளர்க்கின்றான். சீவகன் வளர்ந்து கல்வியும், பிற கலைகளும் கற்று வல்லவன் ஆகின்றான். காந்தருவதத்தை, குணமாலை, பதுமை, கேமசரி, கனகமாலை, விமலை, சுரமஞ்சரி, இலக்கணை ஆகிய ஏந்திழையர் எண்மரை மணக்கின்றான். பின் கட்டியங்காரனைப் போரில் கொன்று தனக்குரிய நாட்டைப் பெற்று மனைவியருடன் புதல்வரைப் பெற்று இறுதியில் வாழ்க்கை நிலையாமையை அறிந்து துறவு பூண்டு முத்தி பெறுகின்றான். இக்கதையைக் கூறும் காப்பியம் முதலில் கடவுள் வாழ்த்து முதலியனவும் கதையை தொகுத்துக் கூறுவதாகிய பதிகமும் அமையப் பெற்று, பின்னர் நாமகள் இலம்பகம் முதல் முத்தி இலம்பகம் வரையுள்ள பதின்மூன்று இலம்பக உறுப்பாகப் பகுக்கப்பட்டுள்ளது. இதன் மொத்த செய்யுள் 3145.
சிந்தாமணிக் காப்பியம் நமக்கு அறிவுறுத்தும் நல்லுரை களை டாக்டர் உ .வே. சாமிநாதைய்யர் பின்வருமாறு பட்டியலிட்டுக் காட்டுகின்றார். (1) அரசன் அமைச்சரைப் பலமுறை ஆராய்ந்து தெளிய வேண்டும். (2) பெண் வழிச் சேறல் பெருந்துயர் விளைக்கும். (3) தன்ஆசிரியன் கட்டளைப்படியே எப்பொழுதும் ஒழுகல் வேண்டும். (4) பகையை வெல்லக் கருதி னோர் உரிய காலமும், இடமும், வாய்க்குமளவு தன் எண்ணத்தை வெளிப்படுத்தாதிருத்தல் வேண்டும். (5) பிற உயிர்களுக்குத் துன்பம் வரின் உடனே தீர்த்தற்கு முயல வேண்டும். (6) வருந்தும்படி நேரிடினும் தனக்கு ஒருவாற்றானும் பகைவரல்லாதவரைச் சிறிதும் வருந்தலாகாது. (7) தந்தை தாயார் சொல்லைத் தலைவராகக் கொள்ள வேண்டும். (8) அறிவும் அன்புமுள்ள துணைவன் இருந்தால்தான் எண்ணியவற்றை எல்லாம் எளிதில் முடித்துக் கொள்ளலாம். (9) தமக்கு இன்ப துன்பங்கள் வந்தவிடத்து முறையே மகிழ்தலும் வருந்துதலுமின்றி எல்லாம் ஊழ்வினைப் பயனென்று எண்ணல் வேண்டும். (10) எல்லா உயிர்களிடத்தும் எப்போதும் அருள் உடையன் ஆதல் வேண்டும். (11) சற் பாத்திர மறிந்து தானம் செய்தல் வேண்டும். (12) தீ வழிச் செல்வோரைக் காணின் இரங்கி உடன்அவரை நல்வழிப்படுத்த முயலவேண்டும். இவையும் இவைபோன்ற பிறவும் இக்காப்பியத்தால் நன்கு விளங்குகின்றன.
சீவகனின் கதையைத் திருத்தக்க தேவர் ஒரு புரட்சிக் காவியமாகப் புனைந்தார். இவருக்கு முன்னர் காப்பியம் செய்தவர்கள் வெண்பா, அகவற்பா ஆகிய இரண்டு பாக்களை இயற்றி னர். தேவரோ விருத்தம் என்னும் உயர்ந்த பா வகையைப் பயன்படுத்திக் காப்பியம் ஆக்கினார். சிலப்பதிகாரத்தில் 'கானல்வரி' ப் பகுதியில் விருத்தப்பாவைப் பயன்படுத்தி வெற்றி கண்டார், இளங்கோ. என்றாலும் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்கள் கொண்ட ஒரு பெருங் காப்பியம் முழுவதையுமே விருத்தப்பாவில் தந்த முதல்வராக விளங்கினார் தேவர் . நான்கு சீராலான அடிகள் நான்கினைப் பெற்றது, விருத்தப்பா. முதல் வரியில் அமைந்த சீர் வகைகளே பிற மூன்று அடிகளிலும் அமைய வேண்டும். சீர்கள் ஈரசைச் சீராகக் குறுகியோ நாலசைச் சீர் முதலியவைகளாகப் பெருகியோ அமையலாம். சீர் மாறும் போது ஓசை மாறுகின்றது. அதனால் ஒரு நிகழ்ச்சியை அதன் சுவைக்கேற்ற, சூழலுக்கேற்ற, வேகத்திற்கேற்ற ஓசை நயம் பொருந்திய விருத்தப்பாவால் பாட முடிந்தது . விருத்தக் காப்பியத்துக்கு முன்னோடியாக நின்று வழிகாட்டியவர் திருத்தக்கதேவர். அதைப் பின்பற்றிச் சேக்கிழார், கம்பர் போன்றவர்கள் வெற்றி கண்டார்கள்.
திருத்தக்க தேவரின் கவிதைகள் கற்போர் நெஞ்சை அள்ளும் நேர்த்தி மிக்கவை. சுடுகாட்டிலே சீவகனைப் பெற்றெடுக்கின்றாள் விசயை. அரண்மனையில் ஆடம்பரச் சூழலில் திருவிழாக் கோலத்தில் பிறக்க வேண்டிய திருமகன் சுடுகாட்டில் அனாதை போலப் பிறந்த அவலத்தைத் தாயின் புலம்பலாக விளக்குகின்றார், தேவர்.
"வெவ்வாய் ஓரி முழவாக
விளிந்தார் ஈமம் விளக்காக
ஒவ்வாச் சுடுகாட்டு உயர் அரங்கில்
நிழல் போல் நுடங்கிப் பேயாட
எவ்வாய் மருங்கும் இழிந்திரங்கிக்
கூகை குழறிப் பாராட்ட
இவ்வா றாகிப் பிறப்பதோ
இதுவோ மன்னர்க்கு இயல்வேந்தே"
இயற்கை அழகை எழிலுறப் படம் பிடிப்பது கவிஞர் தேவர்க்குக் கை வந்த கலை. நெற்பயிரின் நிலையை விளக்கும்போதே உயர்ந்த உண்மைகளை உவமைகளாக்கி நன்மை உவகையுறச் செய்கின்றார்.
"சொல்லரும் சூற்பசும்பாம்பின் தோற்றம் போல்
செல்லவே கரு இருந்துஈன்று! மேல் அலார்
செல்வமே போல்தலை நிறுவித் தேர்ந்தநூல்
கல்விசேர் மாந்தரின் இறைஞ்சிக் காய்த்தவே"
இளமை நிலையாமை, இன்பம் நிலையாமை, செல்வம் நிலையாமை ஆகியவற்றை நெஞ்சில் நினைக்கும் வண்ணம் நிலைத்த உவமை கொண்டு விளக்குகின்றார், முனிவர்.
"மன்னும் நீர்மொக்குள் ஒக்கும்
மானுடர் இளமை, இன்பம்
மின்னின் ஒத்து இறக்கும் செல்வம்
வெயில்உறு பனியின் நீங்கும்"
மது அருந்துவதால் வரும் தீமையைப் பறவைகளைக் கொண்டு விளக்குகின்றார், சிந்தாமணி ஆசிரியர். உழத்தியர் வார்த்த மதுவைப் பருகியவர்கள் சற்றுச் சிந்த அந்த மது தேங்கி நிற்கின்றது. அதைப் பருகிய ஆண் அன்னம், மதுவின் மயக்கத்தால் இனமறியாது கன்னி பார்வையை நாடுகின்றது. அதைக் கண்ட பெண் மயில், "மது அருந்தினால் மதிமயங்கி இந்த அன்னம் போல் நெறி பிறழ நேரும்" என்று ஆண் மயிலுக்கு எச்சரிக்கை செய்கின்றதாம். மதுவிலக்குக் கொள்கை முழக்கமாய் விளங்கத்தக்க பாடல் இது.
'வளைக்கையாற கடைசியர் மட்டு வாக்கலின்
திளைத்தவர் பருகிய தேறல் தேங்குழிக்
களிப்பவுண்டு இள அனம் கன்னி நாரையைத்
திளைத்தலிற் பெடைமயில் தெருட்டும் செம்மற்றே'
கல்வியின் சிறப்பைச் சீவக சிந்தாமணி சிறப்புறச் செப்புகின்றது.
'கைப்பொருள் கொடுத்தும் கற்றல்
கற்றபின் கண்ணும் ஆகும்;
மெய்ப்பொருள் விளக்கும் ; நெஞ்சின்
மெலிவிற்கோர் துணையும் ஆகும்;
பொய்ப் பொருள் பிறகள்; பொன்னாம்;
புகழுமாம்; துணைவி யாகும்'.
திருத்தக்க தேவரின் சிந்தாமணி செந்தமிழ்ப் புதையலாய் விளங்குகின்றது. ஒரு காப்பியத்தின் அமைப்பு இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதை இது வரையறை செய்தது. இதன் நாட்டு நகர வளத்தினைக் கூறும் பகுதி, "உடோப்பியா என்ற இலட்சிய நாடு போலத் தமிழில் எழுந்த முயற்சி" என்று தெ. போ. மீனாட்சி சுந்தரனார் கூறுகின்றார். பின்னே வந்த புலவர்கள் நாட்டுவளம், நகர்வளம், முதலான கூறுகளை இக்காப்பியத்தைத் தழுவியே புனைந்தனர். இலக்கண இலக்கிய உரையாசிரியர்கள் சிந்தாமணி வரிகளை மேற்கோள் காட்டித் தம் உரைகளுக்கு மேன்மை சேர்த்தனர். இலக்கிய ஆசிரியர்களும் தேவரின் கவிதையையும் கருத்தையும் பொன்போல் போற்றித் தம் நூலுள் பொதிந்து புகழ் கொண்டனர். கம்பர் தம் இராமாயணத்தை அரங்கேற்று கையில், 'சிந்தாமணி கருத்துக்கள் உள்ளனவே' என்று பிறர் கேட்க, 'சிந்தாமணியுளும் ஓர் அகப்பை முகந்து கொண்டோம்.' என்று அவர் பெருமையுடன் கூறினார் என்பர்.
சிந்தாமணி என்பது தெய்வத் தன்மை பொருந்தும் ஒரு மாணிக்கக் கல். அது வேண்டியவர்க்கு வேண்டிய பொருளை வேண்டியவாறே அளிக்குமாம் இச் சிந்தாமணி காப்பியமும் தமிழர்க்கு வேண்டிய நீதிகளை வேண்டியவாறு அளிக்கும் ஆற்றல் பெற்றது.
0 கருத்துகள்