முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கலித்தொகை

     



     முன்னே கண்ட நான்கும் (குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு, ஐங்குறுநூறு) ஆசிரியப்பாவால் அமைந்த அகப்பொருள் தொகை நூல்கள்.  கலித்தொகை கலிப்பாவால் அமைந்தது.  கலிப்பாவும், பரிபாடல் என்னும் பாவும் அகப்பொருள் பாட ஏற்றவை என்கின்றது, தொல்காப்பியம்.

"நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்
பாடல் சான்ற புலனெறி வழக்கினும்
கலியே பரிபாட்டு ஆயிரு பாங்கினும்
உரியதாகும் என்மனார் புலவர்"

     இச் சூத்திரத்தால் தொல்காப்பியர் காலத்துக்கு முன்னரே அகப்பொருள் இலக்கியத்தில் கலிப்பாவும் பரிபாடலும் முதன்மை பெற்றிருந்தன என்பது தெரிகிறது.  இவ்விரண்டும் கொச்சகம், அராகம், சுரிதகம், எருத்து என்னும் உறுப்புகள் கொண்டவை.  இவை இரண்டும் "வெண்பா நடைத்து" என்பர் தொல்காப்பியர்.  இவற்றை 'இசைப்பாட்டு' என உரையாசிரியர் கூறுவர்.

     கலித்தொகையின் பாடல் எண்ணிக்கை நூற்றைம்பது என்று பேராசிரியரும், களவியல் உரையாசிரியரும் குறிப்பிடுவர்.  150 பாடல்களும் சிறிதளவு சிதைவும் இன்றி முழுமையாகக் கிடைத்துள்ளன.

     முதல் பாடல் கடவுள் வாழ்த்து.  ஏனைய 149 பாடல்களும், பாலை, குறிஞ்சி, மருதம், முல்லை, நெய்தல் என்னும் வரிசையில் ஐந்திணைகளைப் பற்றியன.  பாலை-35, குறிஞ்சி-29, மருதம்-35, முல்லை-17, நெய்தல்-33 பாடல்கள், எனும் பகுப்பை உடையது கலித்தொகை.  இப்பகுதிகளை மருதக்கலி முல்லைக்கலி எனவும் முல்லைப்பாடல், குறிஞ்சிப்பாட்டு எனவும் பேராசிரியர் தம் உரையில் குறிப்பிட்டுள்ளார்.

     பாலைக்கலியைப் பெருங்கடுங்கோனும், குறிஞ்சிக் கலியைக் கபிலரும், மருதக்கலியை மருதன் இளநாகனும், முல்லைக்கலியைச் சோழன் நல்லுருத்திரனும், நெய்தல் கலியை நல்லந்துவனும் பாடியதாக ஒரு வெண்பா கூறுகிறது.  இவ்வெண்பா கலித்தொகை ஏட்டுப்பிரதி எதிலும் காணப்படவில்லை.  பிற்காலத்தில் யாரோ எழுதிச் சேர்த்த பொய்ப்பா இந்த வெண்பா.  உண்மையில் கலித்தொகை முழுவதும் 'ஒருவரால் பாடப் பெற்றதே - ஐவரால் பாடப்பட்டதன்று'  என்பதை கே. என். சிவராசப் பிள்ளை,  'The Chronology of the early Tamils' என்னும் தம் நூலில் பல சான்றுகளைக் காட்டி நிறுவுகிறார். எஸ். வையாபுரிப்பிள்ளையும் இதே கருத்தை வலியுறுத்துகிறார்.

     கலித்தொகையைப் பாடிய ஒருவர் நல்லந்துவனார்.  இந்நூலுக்கு நச்சினார்க்கினியர் உரை வகுத்துள்ளார்.  உரை முழுவதும் கிடைக்கிறது.  உரையின் இறுதியில் 'முல்லை, குறிஞ்சி,  மருதம் எனச் சொல்லிய முறையால் சொல்லவும் படுமே என  பழிச் சொல்லாத முறையால் சொல்லவும் படும் என்றாராகலின் இத் தொகையைப் பாலை, குறிஞ்சி, மருதம், முல்லை, நெய்தல் என இம்முறையே சேர்த்தார் நல்லந்துவனார்'  எனக் குறிப்பிடுகிறார்.  இவரே நெய்தற்கலி 25-ஆம் பாடலுரையில் 'தம் பேரறிவு தோன்ற ஆசிரியர் நல்லந்துவனார் செய்யுள் செய்தார்" என்கிறார்.  கடவுள் வாழ்த்துப் பகுதி உரையிலும் நல்லந்துவனார் பெயர் இடம் பெறுகிறது.  சேர்த்தார் என்பதற்கு நூல்யாத்தார் என்றே பொருள்.  எனவே  கடவுள் வாழ்த்து உட்படக் கலித்தொகை முழுவதும் நல்லந்துவனார் என்னும் ஒரே புலவரால் பாடப்பெற்றது என்பது தெளிவு.  இந்நூலை 1887 இல் முதன் முதலில் பதிப்பித்த சி.வை. தாமோதரம் பிள்ளை நூலுக்கு 'நல்லந்துவனார் கலித்தொகை' என்றே தலைப்புத் தந்தார்.

     எட்டுத்தொகையில் கலிப்பாவில் அமைந்த ஒரே நூல் இது.  ஒருவரே இயற்றிய ஒரே நூல் இது.  பிற அகத்திணை தொகை நூல்கள் கூறாத, கைக்கிளை, பெருந்திணை பற்றிய பாடல்களும், மடலேறுதல் கூறும் பாடல்களும், இழிந்தோர் காதலை உரைக்கும் பாடல்களும் இதன்கண் மட்டுமே உண்டு.  பாடல்கள் சிலவற்றில் வினைவலபாங்கர் தலைமக்களாய் வருவதால் தலைவி தலைவனை 'ஏடா' என்றும், தலைவன் தலைவியை 'ஏடி' என்றும் அழைப்பது இடம் பெற்றுள்ளது.  இதனைக் கொண்டு  எட்டுத்தொகையில் காலத்தால் பிற்பட்டது கலித்தொகை என்பர்.  கலித்தொகையின் காலம் சங்க காலத்தின் இறுதிப் பகுதியாக இருக்க வேண்டும்.  இதன் காலம் கி.பி. மூன்றாம் நூற்றாண்டு என்பர் சிலர்.

     கலித்தொகைப் பாடல்கள் பாண்டிய அரசன் ஒருவனைப் பற்றியே குறிப்பிடுகின்றன; பாண்டியர் நகரமான கூடல் , பாண்டி நாட்டு ஆறான வையை, பாண்டியர் மலையான பொதியல் ஆகியனவே பேசப் பெறுகின்றன.  வேறு மன்னர்களைப் பற்றியோ பிற நாடு நகர்களைப் பற்றியோ ஒரு குறிப்பும் இதில் இல்லை.  எனவே நல்லந்துவனார் நாட்டுப்பற்று மிக்க பாண்டி நாட்டுப் புலவர் என்பது புலனாகிறது.

     கலித் தொகையில் இதிகாச புராணக் கதைகள் மிகுதியாய் உள்ளன.  இவற்றுள் பெரும்பாலானவை பிறதொகை நூல்களில் இடம் பெறாத கதைப் பகுதிகள்.

     கலித்தொகைப் பாடல்கள் சிறுகதை அமைப்பிலும் ஓரங்க நாடகப் பாங்கிலும் அமைந்துள்ளன.  ' சுடர்த் தொடீஇ கேளாய் ' எனத் தொடங்கும் 51 - ஆம் பாடல் கவிதை வடிவில் அமைந்த சிறந்த சிறுகதை.  பல பாடல்கள் நாடக உரையாடல்களாகவே அமைந்து கற்போர் கண்முன் காட்சியாக விரிகின்றன!  கலிப்பாவின் சில பகுதிகளைக் கண்டு களிப்போம்.

     தோழி தலைவனை இயற் பழித்து மொழிகிறாள். கேட்டுப் பொறாத தலைவி தலைவனின் உயர்வை எடுத்து உரைக்கிறாள்:

' கூர்வு உற்று ஒருதிறம் ஒல்காத நேர்கோல்
அறம் புரி நெஞ்சத்தவன் ' 

'நீரினும் சாயல் உடையன் நயந்தோர்க்குத் 
தேர் ஈயும் வண் கைய்யவன்' 

' அஞ்சுவது அஞ்சா அறனலி அல்லன் என் 
நெஞ்சம் பிணி கொண்டவன் '
(  கலித்தொகை 42)

     கலித்தொகை பல உயர்ந்த அறக்கருத்துக்களை ஒரே   வரியில் பழமொழிப் பான்மையில் தருவது; ஒரு முறை படிப்பினும் உள்ளத்தில் பதிவதாம்.

 ' ஆற்றுதல்' என்பது ஒன்று அலந்தார்க்கு உதவுதல்;
 ' போற்றுதல் ' என்பது புணர்ந்தாரைப் பிரியாமை
' பண்பு ' எனப்படுவது பாடு அறிந்து ஒழுகுதல்;
' அன்பு ' எனப்படுவது தன் கிளை  செறாஅமை;
' அறிவு' எனப்படுவது பேதையர் சொல்நோன்றல்;
' செறிவு ' எனப்படுவது கூறியது  மாறாஅமை; 
' நிறை ' எனப்படுவது மரைபிறர் அறியாமை;
' முறை ' எனப்படுவது கண்ணோடாது உயிர் வெளவல்; 
' பொறை ' எனப்படுவது பொற்றாரைப் பொறுத்தல்;
(-கலித்தொகை : 133)

     ஆற்றுதல் முதல் பொறை வரை உள்ள ஒன்பது பண்புகளைப் பெறுபவன், உயர்ந்தோரினும் உயர்வு உடையவனாய்த் திகழ்வான்.  நல்லந்துவனார் வழங்கும் நவமணிச் சொத்து, இவ்வறிவுரை க் கொத்து.

     கலித்தொகைப் பாடல்கள் யாப்பால் இயற்றமிழ்; வழங் கொலியால் இசைத்தமிழ்: பா அமைப்பால் நாடகத் தமிழ்.  எனவே கலித் தொகை  தருவது முத்தமிழ் விருந்து. 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2.நாலடியார்

           பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் திருக்குறளுக்கு அடுத்த சிறப்பைப் பெற்ற நூல், நாலடியார்.  திருக்குறள் இரண்டடிக் குறள் வெண்பாவால் இயன்ற நூல்.  நாலடியார், நான்கடி வெண்பாக்களால் இயற்றப்பட்ட நூல், குறளின் கருத்தையே ஓர் எடுத்துக்காட்டுடன் விளக்கிக் கூறும் அமைப்பைக் கொண்டவையே நாலடியார் பாடல்கள்.  எனவே இதைத் 'திருக்குறளின் விளக்கம்' என்று கொள்வர்.     'நாலடி' என்பதும் இதன் பெயரே.  இப்பெயர் 'ஆர்' என்னும் சிறப்பு விகுதி பெற்று 'நாலடியார்' ஆனது.  நூலில் 400 பாக்கள் இருப்பதால் சங்கத் தொகை நூல்போல, 'நாலடி நானூறு' எனவும் வழங்கப் படுகிறது.  பாரதியார் என்பது வேறுள பாரதியார்களைக் குறிக்காமல் சுப்பிரமணிய பாரதியாரையே குறிப்பது போல, நாலடியார் என்பது கீழ்க்கணக்கில் உள்ள நாலடிப் பாக்கள் பெற்ற  நூல்கள் எவற்றையும் குறிக்காது நாலடி ஒன்றையே குறிப்பது.  இந்நூலின் சிறப்பை உணர்த்தும் 'நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி' என்னும் பழமொழியும், 'பழகு தமிழ்ச் சொல்லருமை நால் இரண்டில்' என்னும் தனிப்பாடல் அடியும் நாலடியாரின் புகழைப்...

முத்தமிழ் வளர்த்த முச்சங்கம்

     நாட்டையும் மக்களையும் காப்பதைக் கடனாகக் கொண்ட தமிழ் மன்னர்கள், மொழியைக் காப்பதையும் முக்கிய கடமையாகக் கருதினார்கள்.  சேர சோழ பாண்டியராகிய மூவேந்தர்களும் புலவர்களை ஆதரித்து மொழியின் சிறப்புக்கும் இலக்கிய வளர்ச்சிக்கும் துணைநின்றனர்.  அவருள்ளும்  பாண்டியர் சங்கம் கண்டு தமிழ் வளர்த்த பெருமை பெற்றனர்.  இதனால் செந்தமிழையும் செழியனையும் இணைத்துப் பேசும் மரபும் ஏற்பட்டதைப்  பின்வரும் சான்றுகள் விளக்கும். "வீயாத் தமிழுடையான்  பல்வேற் கடற்றானைப் பாண்டியன்"           - யாப்பருங்கலக் காரிகை மேற்கோள் செய்யுள்  "பாடு தமிழ் வளர்த்த கூடல் "            -புறத்திரட்டு  "சோமன் வழிவந்த பாண்டிய நின்  நாடுடைத்து நல்ல தமிழ்"           திருமுருகாற்றுப்படை உரையில் நச்சினார்க்கினியர் வழங்கும் மேற்கோள் . "வித்த யாண்ட விளம்பழையன் மாறனையும்"           -பதிற்றுப்பத்து பதிகம்       பாண்டிய மன்னர்கள் தம் தலைநகரில் ச...

கீழ்க்கணக்கு மேல்கணக்குப் பிரிவு

  கணக்கு - நெடுங்கணக்கு      சங்க இலக்கிய நூல்களையும் சங்கம் மருவிய காலத்து நூல்களையும் முறையே பதினெண் மேல்கணக்கு, பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் எனப் பிரிப்பது மரபு.  இவற்றைத் தமிழ்விடு தூது,                                                                           'மூத்தோர்கள்  பாடியருள் பத்துப் பாட்டும் எட்டுத் தொகையும்  கேடில் பதினெட்டுக் கீழ்க்கணக்கும்'     என்று மொத்தமாகக் குறிப்பிடுகிறது.     கணக்கு என்னும் சொல் தற்காலத்தே எண் தொடர்பான கணிதத்தைக் குறிக்கும் பண்டைக் காலத்தில், கணக்கு என்பது எழுத்துகளையும் , எழுத்தினால் இயற்றப்பட்ட இலக்கியங்களையும் குறித்தது.     தமிழ் மொழியின் உயிர்,மெய் எழுத்துகளை நெடுங்கணக்கு என வழங்கினர். இலக்கியங்களைக் கணக்கு என வழங்கியதைப் பதினெண் கீழ...