முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சுந்தரர்

     


     செந்தமிழ் வல்ல சுந்தரர் திருமுனைப் பாடி நாட்டில், திருநாவலூரில் சடையனார்க்கும், இசை ஞானியார்க்கும் தவப் புதல்வராக அவதரித்தார்.  இவரது இயற்பெயர் நம்பி ஆரூரர்.  நரசிங்க முனையரையர் என்னும் நாடாளும் மன்னன் இவரைத் தம் சுவிகாரப் புதல்வனாக எடுத்து வளர்த்தான்.

    கைலையில் சிவபிரானுக்கு அணுக்கத் தொண்டராக விளங்கிய ஆலால சுந்தரரே இந்த நம்பி ஆரூரர்.  அதனால் ஆரூரர், திருமணம் செய்து கொள்ளும் தருணத்தில் முக்கண்ணன் முதியவன் வடிவத்தில் வந்து இவரைத் தடுத்தாட்கொண்டான்.  பின், இவர் 'பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா' எனத் தொடங்கும் பாடல் முதல் பல்லாயிரம் பாடல்களால் பரமன் புகழைப் பாடினார்.

    சுந்தரர், திருவாரூரில் பரவை நாச்சியாரையும், திருவொற்றியூரில் சங்கிலி நாச்சியாரையும் மணந்து கொண்டார்.  தம்பிரான் தோழன், சேரமான் தோழர், திருநாவலூரர், வான் தொண்டர், ஆளுடைய நம்பி என்னும் வேறுபெயர்கள் உண்டு.  இறுதியில் சேரமான் பெருமாள் நாயனாரோடு கைலை அடைந்தார்.

    சுந்தரர் கி.பி. ஏழாம் நூற்றாண்டின் இறுதியிலும், எட்டாம் நூற்றாண்டின் முதற்பகுதியிலும் வாழ்ந்தவர்.  மொத்தம் முப்பத்தெண்ணாயிரம் பதிகங்கள் இவர் பாடியதாகக் கூறுவர் ,  திருமுறை வகுத்தபோது கிடைத்தவை 100 பதிகங்களே .  இன்று 1026 பாடல்கள் கிடைக்கின்றன.  இவை ஏழாம் திருமுறையாக அமைக்கப் பெற்றுள்ளன.

    கருமிகளை வீணாய்ப் பாடுவதைவிடக் கருணைக் கடவுளான கண்ணுதலானைப் பாடிப் பயன் பெறுங்கள் என்று புலவர்க்குச் சுந்தரர் அறிவுரை கூறும் பாடல் அனைவராலும் பாராட்டப்படுவது:

'மிடுக்கி வாதனை வீம னேவிறல் 
    விசயனே வில்லுக் கிவன் என்று 
கொடுக்கி லாதனைப் பாரியே என்று 
    கூறினும் கொடுப் பாரிலை 
பொடிக் கொள் மேனியெம் புண்ணியன்புக 
    லூரைப் பாடுமின் புலவர்காள் 
அடுக்கு மேல் அமருலக மான்வதற்கு 
    யாதும் ஐயுற வில்லையே'.

    இறைவன் பெருமையைக் கூறும் சுந்தரர் பாடல்களில் அனைவரும் அறிந்த - அறிய வேண்டிய பாடல் மழபாடி மாணிக்கப் பாடல்.

'பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து 
மின்னார் செஞ்சடைமேல் மிளிர் கொன்றை அணிந்தவனே 
மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே 
அன்னே உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே!'

    பெரிய புராணம் பிறப்பதற்கு அடிப்படையாக அமைந்தது, சுந்தரர் பாடிய 'திருத்தொண்டத் தொகை'யே ஆகும்.  அரசன் அடியார் அனைவர்க்கும் தம்மை அடியவனாகக் கூறும் பாடல் படித்துப் படித்து மகிழத்தக்கது.  அதன் ஒரு பகுதியைப் பார்ப்போம்.

'பத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன்;
    பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன்;
சித்தத்தை சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன்;
    திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன்;
முப்போதும் திருமேனி தீண்டுவார்க்கு அடியேன்;
    முழுநீறு பூசிய முனிவர்க்கும் அடியேன்;
அப்பாலும் அடிச்சார்ந்த அடியார்க்கும் அடியேன்;
    ஆருரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே!

    சிந்தை மயக்கும் இத்தகைய பாடலை இயற்றிய சுந்தரருக்கு 'அடியேன்' என்று சொல்லாதவர்கள், தமிழ் கல்லாதவர்களே!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2.நாலடியார்

           பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் திருக்குறளுக்கு அடுத்த சிறப்பைப் பெற்ற நூல், நாலடியார்.  திருக்குறள் இரண்டடிக் குறள் வெண்பாவால் இயன்ற நூல்.  நாலடியார், நான்கடி வெண்பாக்களால் இயற்றப்பட்ட நூல், குறளின் கருத்தையே ஓர் எடுத்துக்காட்டுடன் விளக்கிக் கூறும் அமைப்பைக் கொண்டவையே நாலடியார் பாடல்கள்.  எனவே இதைத் 'திருக்குறளின் விளக்கம்' என்று கொள்வர்.     'நாலடி' என்பதும் இதன் பெயரே.  இப்பெயர் 'ஆர்' என்னும் சிறப்பு விகுதி பெற்று 'நாலடியார்' ஆனது.  நூலில் 400 பாக்கள் இருப்பதால் சங்கத் தொகை நூல்போல, 'நாலடி நானூறு' எனவும் வழங்கப் படுகிறது.  பாரதியார் என்பது வேறுள பாரதியார்களைக் குறிக்காமல் சுப்பிரமணிய பாரதியாரையே குறிப்பது போல, நாலடியார் என்பது கீழ்க்கணக்கில் உள்ள நாலடிப் பாக்கள் பெற்ற  நூல்கள் எவற்றையும் குறிக்காது நாலடி ஒன்றையே குறிப்பது.  இந்நூலின் சிறப்பை உணர்த்தும் 'நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி' என்னும் பழமொழியும், 'பழகு தமிழ்ச் சொல்லருமை நால் இரண்டில்' என்னும் தனிப்பாடல் அடியும் நாலடியாரின் புகழைப்...

முத்தமிழ் வளர்த்த முச்சங்கம்

     நாட்டையும் மக்களையும் காப்பதைக் கடனாகக் கொண்ட தமிழ் மன்னர்கள், மொழியைக் காப்பதையும் முக்கிய கடமையாகக் கருதினார்கள்.  சேர சோழ பாண்டியராகிய மூவேந்தர்களும் புலவர்களை ஆதரித்து மொழியின் சிறப்புக்கும் இலக்கிய வளர்ச்சிக்கும் துணைநின்றனர்.  அவருள்ளும்  பாண்டியர் சங்கம் கண்டு தமிழ் வளர்த்த பெருமை பெற்றனர்.  இதனால் செந்தமிழையும் செழியனையும் இணைத்துப் பேசும் மரபும் ஏற்பட்டதைப்  பின்வரும் சான்றுகள் விளக்கும். "வீயாத் தமிழுடையான்  பல்வேற் கடற்றானைப் பாண்டியன்"           - யாப்பருங்கலக் காரிகை மேற்கோள் செய்யுள்  "பாடு தமிழ் வளர்த்த கூடல் "            -புறத்திரட்டு  "சோமன் வழிவந்த பாண்டிய நின்  நாடுடைத்து நல்ல தமிழ்"           திருமுருகாற்றுப்படை உரையில் நச்சினார்க்கினியர் வழங்கும் மேற்கோள் . "வித்த யாண்ட விளம்பழையன் மாறனையும்"           -பதிற்றுப்பத்து பதிகம்       பாண்டிய மன்னர்கள் தம் தலைநகரில் ச...

கீழ்க்கணக்கு மேல்கணக்குப் பிரிவு

  கணக்கு - நெடுங்கணக்கு      சங்க இலக்கிய நூல்களையும் சங்கம் மருவிய காலத்து நூல்களையும் முறையே பதினெண் மேல்கணக்கு, பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் எனப் பிரிப்பது மரபு.  இவற்றைத் தமிழ்விடு தூது,                                                                           'மூத்தோர்கள்  பாடியருள் பத்துப் பாட்டும் எட்டுத் தொகையும்  கேடில் பதினெட்டுக் கீழ்க்கணக்கும்'     என்று மொத்தமாகக் குறிப்பிடுகிறது.     கணக்கு என்னும் சொல் தற்காலத்தே எண் தொடர்பான கணிதத்தைக் குறிக்கும் பண்டைக் காலத்தில், கணக்கு என்பது எழுத்துகளையும் , எழுத்தினால் இயற்றப்பட்ட இலக்கியங்களையும் குறித்தது.     தமிழ் மொழியின் உயிர்,மெய் எழுத்துகளை நெடுங்கணக்கு என வழங்கினர். இலக்கியங்களைக் கணக்கு என வழங்கியதைப் பதினெண் கீழ...