15. திணைமொழி ஐம்பது
இந்நூல், ஐந்திணை ஐம்பது போலவே திணைக்குப் பத்துப்பாடல் வீதம் ஐம்பது பாடலைக் கொண்டது. எனவே திணைமொழி ஐம்பது எனும் பெயர் பெற்றது. திணை வரிசை, குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என அமைந்துள்ளது; ஐம்பது பாடல்களில் 46 இன்னிசை வெண்பாக்கள்; எஞ்சிய நான்கே நேரிசை வெண்பாக்கள்.
இந்நூலாசிரியப் பெயர் கண்ணஞ் சேந்தனார். இவர் சாத்தந்தையாரின் புதல்வர். புறநானூற்றில் சோழன் போரவைக் கோப்பெருநற் கிள்ளியைப் பாடிய சாத்தந்தையாரே கண்ணஞ் சேந்தனாரின் தந்தையார் என்று, டாக்டர். உ.வே. சாமிநாதையர் குறிப்பிட்டார். அதனைப் பலரும் மறுத்து, இவர் இருண்ட காலத்துப் புலவரே அல்லாமல் சங்கத்துச் சான்றோர் அல்லர் என்பர். கார் நாற்பதின் ஆசிரியர் கண்ணங் கூத்தனாரும், இந்நூலாசிரியர் கண்ணஞ் சேந்தனாரும் உடன் பிறந்தார் ஆகலாம் எனப் பெயர் ஒற்றுமை கண்டு கூறுவோர் உண்டு, சேந்தனார் வைணவ, சைவ வேறுபாடு கருதாத ஒரு வைதிகர்.
சேந்தனாரின் செந்தமிழ்ப் புலமை அறிய, ஒரு பாடலை நோக்குவோம். 'இரவுக் குறி விலக்கி வரைவு கடாயது' என்னும் துறையில் அமைந்த பாடலில் 'நீ இரவில் வரின் ஊரில் அலர் எழும் ' எனத் தோழி உரைக்கிறாள். இப்பாடலில் மலையருவி விழும் ஓசை, யாழ், குழல், முழவு ஆகிய இசைக் கருவிகளின் இன்னோசை கலந்ததைப் போல இருந்தது என வரும் உவமை உள்ளுந்தோறும் உள்ளம் உவகையுறும்.
'யாழும் குழலும் முழவும் இயைந்தெனவீழும் அருவி விறல்மலை நன்னாடமழைமான் நோக்கியும் ஆற்றாள்; இரவரின்ஊர்அறி கௌவை தரும்.
16. ஐந்திணை எழுபது
திணைக்குப் பதினான்கு பாடல்கள் வீதம் ஐந்திணைக்கும் சேர்த்து எழுபது பாடல்களைப் பெற்ற நூல், இது. இதில் குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல் என்னும் முறையில் திணைகள் அமைந்துள்ளன. எழுபது பாடல்களில் நான்கு பாடல்கள் கிடைக்கவில்லை. தற்போது கிடைத்துள்ளவை 66 பாடல்கள்.
இந்நூலாசிரியர் பெயர் மூவாதியார். இவர் சமணர் எனச் சிலர் கூறும் கூற்றுக்குப் போதுமான சான்று இல்லை. நூலில் உள்ள கடவுள் வாழ்த்துப் பாடல், விநாயகர் வணக்கம் கூறும். கி.பி. ஏழாம் நூற்றாண்டுக்குப் பின்னரே பிள்ளையார் வழிபாடு தமிழகத்தில் நுழைந்தது. இக்கடவுள் வாழ்த்தை மூவாதியார் இயற்றவில்லை என்பது, 1. கீழ்க்கணக்கு அகப்பொருள் நூல் எதிலும் கடவுள் வாழ்த்துப் பாடல் பெறவில்லை. 2. கடவுள் வாழ்த்துப் பாடல் இந்நூலின் புறத்தே உள்ளது. 3. இந்நூலின் பழைய உரையாசிரியர் வாழ்த்துப் பாடலுக்கு உரை எழுதவில்லை என்னும் முக்காரணங்களால் உறுதியாகிறது. இவர் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டினர் எனக் கொள்வது பொருந்தும்.
'கள்ளத்தின் ஊச்சும் என்பர் காதலர்உள்ளம் படர்ந்த நெறி'
என்னும் ஐந்திணை ஐம்பதின் ஒரு பாடலின் பாதிப்பகுதி,
'கள்ளர் வழங்கும் சுரம் என்பர் காதலர்உள்ளம் படர்ந்த நெறி'
என்று ஏறத்தாழ அப்படியே இந்நூலில் எடுத்தாளப் பட்டுள்ளது. இது மூவாதியார், மாறன் பொறையனாருக்குப் பிற்பட்டவர் எனக் கருதச் செய்கிறது.
தலைமகள் இயற்பட மொழிந்ததாக அமைந்த ஒரு பாடல், 'சான்றோர் நட்புச் சிதையாமல் சிறந்து பயன்தரும்.' என்னும் நற்கருத்தை நவில்கிறது. 'தலைவன் சான்றோன்; ஆதலால் அவன் நட்பும் நலம் தரும்' என்று தலைவியின் நெஞ்சு நம்புகிறதாம்.
'சான்றவர் கேண்மை சிதைவு இன்றாய், ஊன்றி,வலி ஆகி, பின்னும் பயக்கும்; மெலிவு இல்கயம் திகழ் சோலைமலை நாடன் கேண்மைநயம் திகழும் என்னும் என் நெஞ்சு'
0 கருத்துகள்