முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வைணவ இலக்கியங்கள்

 வைணவம் சங்க காலத்திலேயே தமிழகத்தில் வேரூன்றிய சமயம். "மாயோன் மேய காடுறை உலகம்" என்றும்,

"மாயோன் மேய மன்பெருஞ் சிறப்பில் 
தாவா விழுப்புகழ் பூவைநிலையும்'

என்றும் தொல்காப்பியம் கூறும் நூற்பாக்கள் மாயோனாகிய திருமாலின் சிறப்பை உணர்த்தும்,

'கணங்கொள் அவுணர் கறந்து பொலந்தார் 
மாயோன் மேயஒண் நன்னாள்; - மதுரைக் காஞ்சி 
 
'புள்ளணி நீள்கொடிச் செல்வன்'. - திருமுருகாற்றுப்படை 
 
'காந்தளம் சிலம்பில் களிறுபடிந் தாங்குப் 
பாம்பணைப் பள்ளி அமர்ந்தோன் ' - பெரும்பாண் ஆற்றுப்படை 

    மேற்கண்டவாறு சங்க இலக்கியங்கள் திருமாலைப் போற்றுகின்றன.  சிலப்பதிகாரம் ஆய்ச்சியர் குரவை மூலம் மாலின் மாண்பினைக் கூறும்.

    சங்கம் மருவிய காலமான இருண்ட காலத்தில் களப்பிரர் ஆதிக்கத்தில் வைணவ சமயமும் ஒளி குன்றி இருண்டது.  களப்பிரர் ஆட்சியகன்று, பல்லவரும் பாண்டியரும் செந்தமிழ் நிலத்தே செங்கோலோச்சிய போது சைவம் புத்துயிர் பெற்றது போல வைணவமும் புத்துயிர் பெற்றது.

    வைணவ சமயத்தை வாழ்விக்க வந்த சான்றோர்களை ஆழ்வார்கள் என்றும் ஆசார்யர்கள் என்றும் கூறுவர்.  இறைவனாகிய திருமாலின் குணங்களில் ஈடுபட்டு ஆழ்ந்தவர்கள் ஆழ்வார்கள் என வழங்கினர்.  ஆழ்வார்களுக்குப் பின்னே தோன்றி, அவர்களுடைய சொல்லையும் செயலையும் பின்பற்றி, வைணவத்தை வளர்த்தவர்கள் ஆசார்யர்கள் எனப்பட்டனர்.

    ஆசார்யர்களுக்குத் தலைமையானவர் நாதமுனிகள்.  இவர் கி.பி. 825 இல் அவதரித்தார்.  அதனால் ஆழ்வார்கள் எனப்படுவோர் கி.பி. 825க்கு முன்னே தோன்றியவர்கள் ஆவார்கள்.  இவ்வைணவப் பெரியோர்களின் வரலாற்றைக் கூறும் நூல்கள் பல உள்ளன.  அவற்றுள் காலத்தால் முற்பட்டவை இரண்டு: 1. இராமானுசர் காலத்திலிருந்த கருட வாகன பண்டிதர் கவிதையில் இயற்றிய திவ்விய சூரி சரிதை.  2. நம்பிள்ளை காலத்தவரான பின் பழகிய பெருமாள் ஜீயர், மணிப்பிரவாள நடையில் இயற்றிய ஆறாயிரப்படி குருப் பரம்பரை.

    ஆழ்வார்கள் பதின்மர் என்றும் பதினொருவர் என்றும் கூறுவோர் உண்டு.  எனினும் ஆழ்வார்கள் பன்னிருவர் என்பதே பெருவழக்கு.  பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசை ஆழ்வார், நம்மாழ்வார், மதுரகவியாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், தொண்டரடிப் பொடியாழ்வார், திருப்பாணாழ்வார், திருமங்கையாழ்வார், குலசேகர ஆழ்வார் என்போரே அப்பன்னிருவர்.  இவருள் முதல் மூவரும் முதலாழ்வார்கள் என  வழங்கப்பெறுவர்.  ஆழ்வார்களின் பாடல்களை, நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்' என்னும் தொகை நூலில் காணலாம்.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2.நாலடியார்

           பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் திருக்குறளுக்கு அடுத்த சிறப்பைப் பெற்ற நூல், நாலடியார்.  திருக்குறள் இரண்டடிக் குறள் வெண்பாவால் இயன்ற நூல்.  நாலடியார், நான்கடி வெண்பாக்களால் இயற்றப்பட்ட நூல், குறளின் கருத்தையே ஓர் எடுத்துக்காட்டுடன் விளக்கிக் கூறும் அமைப்பைக் கொண்டவையே நாலடியார் பாடல்கள்.  எனவே இதைத் 'திருக்குறளின் விளக்கம்' என்று கொள்வர்.     'நாலடி' என்பதும் இதன் பெயரே.  இப்பெயர் 'ஆர்' என்னும் சிறப்பு விகுதி பெற்று 'நாலடியார்' ஆனது.  நூலில் 400 பாக்கள் இருப்பதால் சங்கத் தொகை நூல்போல, 'நாலடி நானூறு' எனவும் வழங்கப் படுகிறது.  பாரதியார் என்பது வேறுள பாரதியார்களைக் குறிக்காமல் சுப்பிரமணிய பாரதியாரையே குறிப்பது போல, நாலடியார் என்பது கீழ்க்கணக்கில் உள்ள நாலடிப் பாக்கள் பெற்ற  நூல்கள் எவற்றையும் குறிக்காது நாலடி ஒன்றையே குறிப்பது.  இந்நூலின் சிறப்பை உணர்த்தும் 'நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி' என்னும் பழமொழியும், 'பழகு தமிழ்ச் சொல்லருமை நால் இரண்டில்' என்னும் தனிப்பாடல் அடியும் நாலடியாரின் புகழைப்...

முத்தமிழ் வளர்த்த முச்சங்கம்

     நாட்டையும் மக்களையும் காப்பதைக் கடனாகக் கொண்ட தமிழ் மன்னர்கள், மொழியைக் காப்பதையும் முக்கிய கடமையாகக் கருதினார்கள்.  சேர சோழ பாண்டியராகிய மூவேந்தர்களும் புலவர்களை ஆதரித்து மொழியின் சிறப்புக்கும் இலக்கிய வளர்ச்சிக்கும் துணைநின்றனர்.  அவருள்ளும்  பாண்டியர் சங்கம் கண்டு தமிழ் வளர்த்த பெருமை பெற்றனர்.  இதனால் செந்தமிழையும் செழியனையும் இணைத்துப் பேசும் மரபும் ஏற்பட்டதைப்  பின்வரும் சான்றுகள் விளக்கும். "வீயாத் தமிழுடையான்  பல்வேற் கடற்றானைப் பாண்டியன்"           - யாப்பருங்கலக் காரிகை மேற்கோள் செய்யுள்  "பாடு தமிழ் வளர்த்த கூடல் "            -புறத்திரட்டு  "சோமன் வழிவந்த பாண்டிய நின்  நாடுடைத்து நல்ல தமிழ்"           திருமுருகாற்றுப்படை உரையில் நச்சினார்க்கினியர் வழங்கும் மேற்கோள் . "வித்த யாண்ட விளம்பழையன் மாறனையும்"           -பதிற்றுப்பத்து பதிகம்       பாண்டிய மன்னர்கள் தம் தலைநகரில் ச...

கீழ்க்கணக்கு மேல்கணக்குப் பிரிவு

  கணக்கு - நெடுங்கணக்கு      சங்க இலக்கிய நூல்களையும் சங்கம் மருவிய காலத்து நூல்களையும் முறையே பதினெண் மேல்கணக்கு, பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் எனப் பிரிப்பது மரபு.  இவற்றைத் தமிழ்விடு தூது,                                                                           'மூத்தோர்கள்  பாடியருள் பத்துப் பாட்டும் எட்டுத் தொகையும்  கேடில் பதினெட்டுக் கீழ்க்கணக்கும்'     என்று மொத்தமாகக் குறிப்பிடுகிறது.     கணக்கு என்னும் சொல் தற்காலத்தே எண் தொடர்பான கணிதத்தைக் குறிக்கும் பண்டைக் காலத்தில், கணக்கு என்பது எழுத்துகளையும் , எழுத்தினால் இயற்றப்பட்ட இலக்கியங்களையும் குறித்தது.     தமிழ் மொழியின் உயிர்,மெய் எழுத்துகளை நெடுங்கணக்கு என வழங்கினர். இலக்கியங்களைக் கணக்கு என வழங்கியதைப் பதினெண் கீழ...