முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நற்றிணை

     


     குறுந்தொகை அடிகளிலும் மிக்கு, ஒன்பதடிச் சிற்றெல்லையும் பன்னிரண்டடிப் பேரெல்லையும் கொண்ட பாடல்களின் தொகுதி நற்றிணை.  திணை என்னும் சொல் ஆகுபெயராய் அகத்திணை நூலைக் குறிக்கிறது. ' திணை எழுபது' முதலிய நூற்பெயரிலும் இத்தன்மையைக் காணலாம்.  சிறிய பாடல்களும் இன்றிப் பெரிய பாடல்களும் இன்றி அளவான பாடல்களைப் பெற்றமையால் இத்திணை, நல் என்னும் அடைமொழி பெற்று 'நற்றிணை'யாயிற்று, என்பர்.  இதன்கண் கடவுள் வாழ்த்து நீங்கலாக 400 பாடல்கள் உள்ளமையால் இது 'நற்றிணை நானூறு' எனவும் வழங்கப்பட்டது.  எனினும் 234 ஆம் பாடல் எனச் சிலரும், இறையனார் அகப் பொருள் உரையில் மேற்கோளாக வரும், 'சான்றோர் வருந்திய வருத்தமும்' எனத் தொடங்கும் பாடலே மறைந்து போன நற்றிணைப் பாடல் எனச் சிலரும் கூறுவர்.  385 ஆம் பாடலின் பிற்பகுதி மறைந்து போனது.  56 பாடல்களைப் பாடிய புலவர்கள் பெயர் தெரியவில்லை.

     நற்றிணையைத் தொகுப்பித்தவன், பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி.  தொகுத்தவர் பெயர் ஏட்டில் இல்லை.  நற்றிணையை 1914-இல் உரை எழுதிப் பதிப்பித்தவர், பின்னத்தூர் அ.நாராயணசாமி ஐயர்.  பின்னே ஒளவை சு.துரைசாமி பிள்ளை விளக்கமான பேருரை வகுத்துள்ளார்.

     நற்றிணைப் பாடல்களின் கற்பனை அழகையும் கவி நயத்தையும் வியந்தே, எட்டுத் தொகைப் பெயர்கள் கூறும் வெண்பா பாடிய புலவன் இதனை முதலில் வைத்துள்ளான் எனக் கருதுவர்.

நற்றிணையில் திருக்குறள் கருத்துகள் இடம் பெற்றுள்ளன.

'பெயக் கண்டு நஞ்சுண்டு அமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டுபவர்'

என்னும் குறள் வெண்பாவை,

'முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின்
நஞ்சும் உண்பர் நனிநா கரிகர்'




என்ற ஆசிரியப்பாவாக்கி அதே காருத்தைச் சிறிதும் மாற்றாமல் தருகிறது நற்றிணை.  இவ்வாறு குறளின் குரலை வெளிப்படுத்திய புலவரின் பெயர் மறைந்தது ஒரு குறையே.

     கடமை அறிந்து நாட்டைக் காக்கும் நல்லரசனின் குடை நிழலான ஆட்சி இனிய இன்பம் தரும் நிழலைப் போன்றது, என்று இறைமாட்சியின் இயல்பை இயம்புகிறது.

'கடனறி மன்னர் குடைநிழற் போலப் 
பெருந் தண்ணென்ற மரநிழல்'

     கடற்கரைப் பகுதியில் தேரைச் செலுத்தும் பாகன் தேர்ச் சக்கரத்தில் நண்டுகள் சிக்கி நசுங்காதபடி எச்சரிக்கையோடு செலுத்திய ஜீவகாருண்யத்தை ஒரு பாடல் சித்தரிக்கிறது.

'புணரி பொருத பூமணல் அடைகரை 
ஆழி மருங்கின் அலவன் ஓம்பி
வலவன் வள்பு ஆய்ந்து ஊரே'

(ஆழி - தேர்ச் சக்கரம்; வலவன் - தேர்ப்பாகன்; வள்பு - குதிரைகளை இணைக்கும் வார்)

     இப்பாகனின் உயிர்க்குறுகண் செய்யாத உயர்பண்பு சாலையில் செல்லும் எறும்புகளுக்கு இன்னல் தராத பண்டைய சாலமன் அரசனின் பண்புடன் ஒத்தது.

     அகப் பொருட் சிறப்பை - அதிலும் தலைவியின் தன்னிகரற்ற அன்பை நற்றிணை தெற்றென விளக்குகிறது.  பொருள் வயின் பிரிந்த தலைவனை நினைத்து வருந்தி மெலியும் தலைவி, தான் இறக்க நேரும் என்பதை எண்ணி அஞ்சவில்லை;  இறந்தபின் எடுக்கும் மறுபிறவியில் தலைவனை மறக்க நேருமோ என்றே அஞ்சுகிறாள்.

'சாதல் அஞ்சேன் அஞ்சுவல் சாவில்
பிறப்புப் பிறிது ஆகுவது ஆயின்
மறக்குவேன் கொல்லென் காதலன் எனவே'

     இம்மைக்கும் ஏழேழ் பிறவிக்கும் தன் தலைவனே தொடர்ந்து கணவனாக அமைய வேண்டும் என்று அவாவும் அன்புத் தலைவியைப் பாடியவர், அம்மூவனார்.

     செல்வத்தில் பிறந்து செலவமாய் வளர்ந்து செழித்தவள் ஒரு தலைவி.  பிறந்த வீட்டில் தேன் கலந்த பாலைத் தான் பருக அடம் பிடிப்பவள் அவள்.  காதலில் ஒருவனை அவள் கைப்பிடித்த பின்பு கொண்ட கணவன் குடிவறுமை கண்டது.  அதை அறிந்து செல்வத் தந்தை கொடுத்தனுப்பிய கொழுஞ்சோற்றை மனத்தாலும் நினையாமல், ஒரு பொழுது உண்டு மறுபொழுது பட்டினி கிடந்து, கணவனின் வருவாய்க்குத் தக்க வாழ்வு மேற்கொண்ட வண்மையை கற்பின் திண்மையைச் செவிலித் தாய் நேரிலே கண்டு, பொற்றொடி கற்பியல் நற்றாய்க்குப் பெருமிதத்தோடு உரைப்பதாக அமைந்துள்ளது ஒரு பாடல்.

'கொண்ட கொழுநன் குடிவறன் உற்றுஎனக்
கொடுத்த தந்தை கொழுஞ்சோறு உள்ளாள்
ஒழுகுநீர் நுணங்கு அறல் போலப் 
பொழுது மறுத்து உண்ணும் சிறுமதுகையளே'

     தமிழ் மகளுக்கு வேதமாகும் பண்பை விளக்கும் இப்பாடல் போதனார் பாடியது.  இக்கருத்தைத் தழுவியே, "பொன்னேர் பூட்டி, வெள்ளி வித்திடினும் வேண்டேன் பிறந்தகத்து ஈண்டிய வாழ்வு"  என்று கூறிப் பிற்காலத்தே ஒரு தலைவி பெருமையடைகிறாள்.

     சங்க இலக்கிய இன்பத்தைத் துய்க்க விரும்புவோர்க்கு உற்ற துணை, இந்நற்றிணை.




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2.நாலடியார்

           பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் திருக்குறளுக்கு அடுத்த சிறப்பைப் பெற்ற நூல், நாலடியார்.  திருக்குறள் இரண்டடிக் குறள் வெண்பாவால் இயன்ற நூல்.  நாலடியார், நான்கடி வெண்பாக்களால் இயற்றப்பட்ட நூல், குறளின் கருத்தையே ஓர் எடுத்துக்காட்டுடன் விளக்கிக் கூறும் அமைப்பைக் கொண்டவையே நாலடியார் பாடல்கள்.  எனவே இதைத் 'திருக்குறளின் விளக்கம்' என்று கொள்வர்.     'நாலடி' என்பதும் இதன் பெயரே.  இப்பெயர் 'ஆர்' என்னும் சிறப்பு விகுதி பெற்று 'நாலடியார்' ஆனது.  நூலில் 400 பாக்கள் இருப்பதால் சங்கத் தொகை நூல்போல, 'நாலடி நானூறு' எனவும் வழங்கப் படுகிறது.  பாரதியார் என்பது வேறுள பாரதியார்களைக் குறிக்காமல் சுப்பிரமணிய பாரதியாரையே குறிப்பது போல, நாலடியார் என்பது கீழ்க்கணக்கில் உள்ள நாலடிப் பாக்கள் பெற்ற  நூல்கள் எவற்றையும் குறிக்காது நாலடி ஒன்றையே குறிப்பது.  இந்நூலின் சிறப்பை உணர்த்தும் 'நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி' என்னும் பழமொழியும், 'பழகு தமிழ்ச் சொல்லருமை நால் இரண்டில்' என்னும் தனிப்பாடல் அடியும் நாலடியாரின் புகழைப்...

முத்தமிழ் வளர்த்த முச்சங்கம்

     நாட்டையும் மக்களையும் காப்பதைக் கடனாகக் கொண்ட தமிழ் மன்னர்கள், மொழியைக் காப்பதையும் முக்கிய கடமையாகக் கருதினார்கள்.  சேர சோழ பாண்டியராகிய மூவேந்தர்களும் புலவர்களை ஆதரித்து மொழியின் சிறப்புக்கும் இலக்கிய வளர்ச்சிக்கும் துணைநின்றனர்.  அவருள்ளும்  பாண்டியர் சங்கம் கண்டு தமிழ் வளர்த்த பெருமை பெற்றனர்.  இதனால் செந்தமிழையும் செழியனையும் இணைத்துப் பேசும் மரபும் ஏற்பட்டதைப்  பின்வரும் சான்றுகள் விளக்கும். "வீயாத் தமிழுடையான்  பல்வேற் கடற்றானைப் பாண்டியன்"           - யாப்பருங்கலக் காரிகை மேற்கோள் செய்யுள்  "பாடு தமிழ் வளர்த்த கூடல் "            -புறத்திரட்டு  "சோமன் வழிவந்த பாண்டிய நின்  நாடுடைத்து நல்ல தமிழ்"           திருமுருகாற்றுப்படை உரையில் நச்சினார்க்கினியர் வழங்கும் மேற்கோள் . "வித்த யாண்ட விளம்பழையன் மாறனையும்"           -பதிற்றுப்பத்து பதிகம்       பாண்டிய மன்னர்கள் தம் தலைநகரில் ச...

கீழ்க்கணக்கு மேல்கணக்குப் பிரிவு

  கணக்கு - நெடுங்கணக்கு      சங்க இலக்கிய நூல்களையும் சங்கம் மருவிய காலத்து நூல்களையும் முறையே பதினெண் மேல்கணக்கு, பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் எனப் பிரிப்பது மரபு.  இவற்றைத் தமிழ்விடு தூது,                                                                           'மூத்தோர்கள்  பாடியருள் பத்துப் பாட்டும் எட்டுத் தொகையும்  கேடில் பதினெட்டுக் கீழ்க்கணக்கும்'     என்று மொத்தமாகக் குறிப்பிடுகிறது.     கணக்கு என்னும் சொல் தற்காலத்தே எண் தொடர்பான கணிதத்தைக் குறிக்கும் பண்டைக் காலத்தில், கணக்கு என்பது எழுத்துகளையும் , எழுத்தினால் இயற்றப்பட்ட இலக்கியங்களையும் குறித்தது.     தமிழ் மொழியின் உயிர்,மெய் எழுத்துகளை நெடுங்கணக்கு என வழங்கினர். இலக்கியங்களைக் கணக்கு என வழங்கியதைப் பதினெண் கீழ...